இந்தியா

சென்னையில் இருந்து ஆந்திராவுக்கு கடத்திய 13 கிலோ தங்கம் பறிமுதல்- 4 பேர் கைது

Published On 2023-03-23 05:30 GMT   |   Update On 2023-03-23 05:30 GMT
  • விஜயவாடா பஸ் நிலையத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது வாலிபர் ஒருவர் சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்தார்.
  • 2 இடங்களில் நடந்த சோதனையில் 5 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

திருப்பதி:

தமிழகத்தில் இருந்து ஆந்திராவுக்கு ரெயில், பஸ், கார்கள் மூலம் தங்கம் கடத்தப்பட்டு வருவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் பேரில் 30 பேர் கொண்ட சுங்கத்துறை அதிகாரிகள் குழுவினர் தனித்தனியாக பிரிந்து பல்வேறு இடங்களில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

விஜயவாடா ரெயில் நிலையத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது சந்தேகத்திற்கிடமாக 3 வாலிபர்கள் ரெயில் நிலையத்தில் சுற்றி திரிந்தனர். அவர்களை சுங்கத்துறை அதிகாரிகள் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் அவர்களிடம் இருந்த பைகளை சோதனை செய்தனர். அதில் சுமார் 5 கிலோ எடையுள்ள தங்க கட்டிகள், நகைகள் இருந்தது தெரியவந்தது.

அதற்கு உண்டான உரிய ஆவணங்கள் இல்லாததால் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அவர்கள் 3 பேரும் சென்னை, டி.நகர், சவுந்தரராஜன் தெருவை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.

இதையடுத்து 3 பேரையும் அதிகாரிகள் கைது செய்தனர். அவர்களிடம் தங்கத்தை எங்கிருந்து யாரிடம் கொண்டு செல்ல கடத்தி சென்றனர். என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல் விஜயவாடா பஸ் நிலையத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது வாலிபர் ஒருவர் சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்தார்.

அவரை பிடித்து விசாரணை செய்த போது அவரிடம் இருந்து 3 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அவரையும் அதிகாரிகள் கைது செய்தனர்.

மேலும் 2 இடங்களில் நடந்த சோதனையில் 5 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட 13 கிலோ தங்கமும், சென்னையிலிருந்து கடத்தி வரப்பட்டதாகவும், யாருக்காக கடத்தி வரப்பட்டது என விசாரணை நடத்தி வருவதாகவும் சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Similar News