இந்தியா

சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்ட நர்சு அடித்துக் கொலை- அண்ணன் வெறிச்செயல்

Published On 2023-07-27 09:23 GMT   |   Update On 2023-07-27 09:23 GMT
  • ஆத்திரம் அடைந்த வாலிபர் தங்கை என்று கூட பார்க்காமல் நர்சை சரமாரியாக தாக்கினார்.
  • தலையில் மாறி மாறி தாக்கியதால் நர்சு மயங்கி விழுந்தார்.

திருப்பதி:

தெலுங்கானா மாநிலம் பத்ராத்திரி கோத்தகுடெம் மாவட்டத்தை சேர்ந்த 21 வயது இளம்பெண்.

நர்சிங் படிப்பு முடித்த இவர் அங்குள்ள அரசு ஆஸ்பத்திரியில் பயிற்சி நர்சாக வேலை பார்த்து வந்தார். இவர் வீட்டில் தனியாக இருக்கும் நேரத்தில் டிக்டாக் போன்ற வீடியோக்களை தயாரித்து வெளியிட்டு வந்தார்.

இவரது வீடியோவிற்கு ஏராளமானோர் தங்களது கருத்துக்களை தெரிவித்து வந்தனர். இது பற்றி அறிந்த அவரது அண்ணன் சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட வேண்டாம். அது நல்லதல்ல ஒரு சிலர் ஆபாச கருத்துகளையும் வெளியிடலாம் என கூறி எச்சரித்தார்.

ஆனாலும் நர்சு தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியிட்டு வந்தார். நேற்று முன்தினம் அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதனை கண்ட அவரது அண்ணன் கடுமையாக எச்சரித்தார். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரம் அடைந்த வாலிபர் தங்கை என்று கூட பார்க்காமல் நர்சை சரமாரியாக தாக்கினார். தலையில் அவர் மாறி மாறி தாக்கியதால் நர்சு மயங்கி விழுந்தார்.

இதனைக் கண்டு திடுக்கிட்ட அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக நர்சை கம்மத்தில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக வாரங்கல் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் இறந்தார்.

இதுகுறித்து அவரது தாயார் போலீசில் புகார் அளித்தார். போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து நர்சின் அண்ணனை கைது செய்தனர்.

இந்த சம்பவம் தெலுங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News