இந்தியா

மலப்புரம் போலீஸ் நிலையம் மீது வெடிகுண்டு வீசும் வீடியோ உருவாக்கி சமூக வலைதளங்களில் வெளியிட்ட 5 பேர் கைது

Published On 2023-08-14 04:49 GMT   |   Update On 2023-08-14 04:49 GMT
  • சில வசனங்களை சேர்த்து அவர்கள் வெளியிட்ட அந்த வீடியோவால் பரபரப்பு ஏற்பட்டது.
  • மெலட்டூர் போலீசார், முகம்மது ரியாஸ் உள்ளிட்ட 5 வாலிபர்களையும் பிடித்து விசாரணை நடத்தினர்.

திருவனந்தபுரம்:

இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் அதிக லைக் பெறுவதற்காக, அதில் கணக்கு வைத்திருக்கும் பலர் வித்தியாசமான வீடியோக்களை வெளியிடுகின்றனர். அதிக லைக் வாங்குவதற்காக சிலர் பிரச்சினைக்குரிய வீடியோக்களை வெளியிட்டு, சிக்கலில் மாட்டிக் கொள்கிறார்கள்.

அதுபோன்ற ஒரு நிகழ்வு கேரளாவில் நடந்துள்ளது. கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் பொடு வன்னிக்கல் பகுதியை சேர்ந்தவர்கள் முகம்மது ரியாஸ்(வயது25), முகம்மது ஹலாஸ்(22) சலீம்(20), முகம்மது ஜாசிம்(19), சல்மானில் பாரிஸ்(19). இவர்கள் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் கணக்கு வைத்துள்ளனர்.

அதில் வித்தியாசமாக வீடியோ வெளியிட்டு அதிக லைக்குகளை வாங்க திட்டமிட்ட அவர்கள், மலப்புரம் போலீஸ் நிலையம் மீது வெடிகுண்டு வீசுவது போன்றும், அதில் போலீஸ் நிலையம் முன்பு நிறுத்தப்பட்டிருக்கும் வாகனம் தீப்பிடித்து எரிவது போன்றும், போலீஸ் நிலையம் சேதமடைவது போலவும் காட்சியை உருவாக்கி இன்ஸ்டாகிராம் மற்றும் யு-டியூப்பில் பதிவிட்டனர்.

விசுவல் எபக்ட் மற்றும் சில வசனங்களை சேர்த்து அவர்கள் வெளியிட்ட அந்த வீடியோவால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவலறிந்த மெலட்டூர் போலீசார், முகம்மது ரியாஸ் உள்ளிட்ட 5 வாலிபர்களையும் பிடித்து விசாரணை நடத்தினர். சமூக வலைதளங்களில் அதிக லைக்குகள் வாங்குவதற்காகவே அவ்வாறு வீடியோவை உருவாக்கி, சமூக வலைதளங்களில் வெளியிட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்தது அவர்கள் 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களின் மீது வன்முறையை தூண்டுதல், சமூக வலைதளங்கள் மூலம் காவல்துறையை அவதூறாக பேசுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டு உள்ளது. பின்பு 5 வாலிபர்களையும் போலீசார் ஜாமீனில் விடுவித்தனர்.

Tags:    

Similar News