கேரள மக்களவை தேர்தல்- ராகுல் காந்தி, ஆனி ராஜா, சசிதரூர் உள்பட 204 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்பு
- 86 பேரின் வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
- வேட்பு மனுக்கள் வாபஸ் பெற வருகிற 8-ந்தேதி கடைசி நாளாகும்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தில் உள்ள 20 மக்களவை தொகுதிகளுக்கு வருகிற 26-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. வேட்பு மனு தாக்கல் நேற்று முன்தினம் நிறைவடைந்தது.
திருவனந்தபுரம் தொகுதியில் 22 பேர், அட்டிக்கல் தொகுதியில் 14 பேர், கொல்லம் தொகுதியில் 15 பேர், பத்தினம்திட்டா தொகுதியில் 10 பேர், மாவேலிக்கரை தொகுதியில் 14 பேர், ஆழப்புழா தொகுதியில் 14 பேர், கோட்டயம் தொகுதியில் 17 பேர், இடுக்கி தொகுதியில் 12 பேர், எர்ணாகுளம் தொகுதியில் 14 பேர், சாலக்குடி தொகுதியில் 13 பேர், திருச்சூர் தொகுதியில் 15 பேர், ஆலத்தூர் தொகுதியில் 8 பேர், பாலக்காடு தொகுதியில் 16 பேர், பொன்னானி தொகுதியில் 20 பேர், மலப்புரம் தொகுதியில் 14 பேர், கோழிக்கோடு தொகுதியில் 15 பேர், வயநாடு தொகுதியில் 12 பேர், வடகரா தொகுதியில் 14 பேர், கண்ணூர் தொகுதியில் 18 பேர், காசர்கோடு தொகுதியில் 18 பேர் என 20 தொகுதிகளில் மொத்தம் 290 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர்.
மனுக்கள் மீதான பரிசீலனை நேற்று நடைபெற்றது. அதில் திருவனந்தபுரம் தொகுதியில் 9 பேர், அட்டிக்கல் தொகுதியில் 7பேர், கொல்லம் தொகுதியில் 3பேர், பத்தினம்திட்டா தொகுதியில் 2பேர், மாவேலிக்கரை தொகுதியில் 4பேர், ஆழப்புழா தொகுதியில் 3பேர், கோட்டயம் தொகுதியில் 3பேர், இடுக்கி தொகுதியில் 4 பேர், எர்ணாகுளம் தொகுதியில் 4பேர், சாலக்குடி தொகுதியில் ஒருவர், திருச்சூர் தொகுதியில் 5பேர், ஆலத்தூர் தொகுதியில் 3 பேர், பாலக்காடு தொகுதியில் 5 பேர், பொன்னானி தொகுதியில் 12 பேர், மலப்புரம் தொகுதியில் 4 பேர், கோழிக்கோடு தொகுதியில் 2 பேர், வயநாடு தொகுதியில் 2பேர், வடகரா தொகுதியில் 3பேர், கண்ணூர் தொகுதியில் 6பேர், காசர்கோடு தொகுதியில் 4பேர் என 20 தொகுதிகளில் மொத்தம் 86 பேரின் வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
ராகுல்காந்தி, ஆனி ராஜா, சுரேந்திரன், நடிகர் சுரேஷ் கோபி, மத்திய மந்திரி முரளிதரன், முன்னாள் மத்திய மந்திரி சசிதரூர், முன்னாள் மந்திரி சைலஜா, முன்னாள் முதல்-மந்திரி கருணாகரணின் மகன் முரளிதரன், காங்கிரஸ் பொதுச்செயலாளர் வேணுகோபால் உள்ளிட்ட 204 பேரின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
வேட்பு மனுக்கள் வாபஸ் பெற வருகிற 8-ந்தேதி கடைசி நாளாகும். அதன் பிறகு வேட்பாளர்கள் இறுதி பட்டியல் வெளியாகும். சுயேட்சை வேட்பாளர்ளுக்கு சின்னங்களும் அன்றைய தினம் ஒதுக்கப்படும்.