இந்தியா

ஒரு சம்பவத்தால் ஒட்டுமொத்த மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்ததாக சொல்வது தவறு: பிரபுல் படேல்

Published On 2025-01-18 11:54 IST   |   Update On 2025-01-18 11:54:00 IST
  • மும்பையில் நடந்த நடிகர் சைஃப் அலி கான் சம்பவத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
  • சைஃப் அலி கானை கத்தியால் குத்திய மர்ம நபரை பிடிக்க 30 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது

பாலிவுட் நடிகர் சைஃப் அலி கான் வீடு மும்பை பாந்த்ராவில் உள்ளது. நேற்று முன்தினம் விடியற்காலை திடீரென அவரது வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர், அவரை கத்தியால் தாக்கினார். இதில் அவரது கழுத்து மற்றும் முதுகெலும்பு அருகே பலத்த காயம் ஏற்பட்டது.

சைஃப் அலி கானை கத்தியால் தாக்கிய மர்ம நபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். லீலாவதி மருத்துவமனை அனுமதிக்கப்பட்ட சைஃப் அலி கானுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தற்போது அவரது உடல்நிலை நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளது.

அவர் இரண்டு மூன்று நாட்களில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் மும்பையில் பாதுகாப்பற்ற சூழலை ஏற்படுத்தி உள்ளதாகவும் பா.ஜ.க. அரசு சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க தவறிவிட்டதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.

இந்நிலையில் என்.சி.பி. தலைவர் பிரபுல் படேல் கூறியதாவது:

சட்டம் ஒழுங்கு பற்றி பேசினால், மகாராஷ்டிரா பாதுகாப்பான மாநிலங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. மகாராஷ்டிர காவல்துறை மற்றும் அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க எப்போதும் தயாராக உள்ளது.

மும்பையில் நடந்த நடிகர் சைஃப் அலி கான் சம்பவத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அவர் விரைவில் குணமடைவார். இந்த வழக்கில் விசாரணை முழுவீச்சில் நடந்து வருகிறது.

ஆனால் இந்த ஒரு சம்பவம் காரணமாக சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது, ஒட்டுமொத்த மாநிலமும் சீரழிந்துவிட்டது என்று கூறுவது தவறாகும்.

இவ்வாறு பிரபுல் படேல் கூறினார்.

சைஃப் அலி கானை கத்தியால் குத்திய மர்ம நபரை பிடிக்க 30 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. குற்றவாளியின் படங்களை போலீசார் வெளியிட்டுள்ளனர்.

Tags:    

Similar News