இந்தியா

மாநிலங்களவை எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார் பிரபுல் பட்டேல்

Published On 2024-02-27 16:25 GMT   |   Update On 2024-02-27 16:25 GMT
  • சரத் பவார் கட்சி சார்பில் பதவி நீக்கம் செய்ய மனு.
  • பதவி இன்னும் நான்கு ஆண்டுகள் இருக்கும் நிலையில் ராஜினாமா செய்துள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலம் தேசியவாத காங்கிரஸ் கட்சி சார்பில் பிரபுல் பட்டேல் கடந்த 2022-ம் ஆண்டு ஜூலை மாதம் மாநிலங்களவை எம்.பி.யாக ஐந்தாவது முறையாக தேர்வு செய்யப்பட்டார்.

கடந்த ஆண்டு தேசியவாத காங்கிரஸ் கட்சியில் பிளவு ஏற்பட்டது. சரத் பவாரின் அண்ணன் மகன் அஜித் பவார் கட்சியில் தனக்கென்று ஒரு அணியை பிரித்துக் கொண்டு செயல்பட்டார்.

கட்சியின் பெரும்பாலான எம்.எல்.ஏ.-க்கள் தன்னுடன் இருப்பதாக கூறிக்கொண்டு ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான ஆட்சியில் இணைந்து துணை முதல்வராக பதவி ஏற்றுக் கொண்டார். அவரது ஆதரவு எம்.எல்.ஏ.-க்கள் சில மாநில மந்திரியாக பதவி ஏற்றனர்.

அஜித் பவாருடன் பிரபுல் பட்டேல் இணைந்து செயல்பட்டார். தேர்தல் ஆணையம் தேசியவாத காங்கிரஸ் கட்சி அஜித் பவார் அணிக்கே சொந்தம் என அறிவித்தது. மகாராஷ்டிரா மாநில சபாநாயகரும் அதை உறுதிப்படுத்தினார்.

இந்த நிலையில்தான் சரத் பவார், தேசியவாத காங்கிரஸ் சரத்சந்திரா பவார் கட்சியை தொடங்கினார். சரத் பவார் பிரபுல் பட்டேலை மாநிலங்களவை எம்.பி. பதவியில் இருந்து பதவி நீக்கம் செய்ய வேண்டும் மனு அளித்திருந்தனர்.

இந்த நிலையில்தான் பிரபுல் பட்டேல் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இன்னும் நான்கு ஆண்டுகள் பதவிக் காலம் உள்ள நிலையில் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

அதேவேளையில் மீண்டும் மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை எம்.பி.யாக போட்டியிட இருக்கிறார். அம்மாநிலத்தின் வந்தனா சவான் பதவிக்காலம் ஏப்ரல் மாதத்துடன் முடிவடைகிறது. அந்த இடத்திற்கு பிரபுல் பட்டேல் போட்டியிட இருக்கிறார்.

அரவது ராஜினாமா கடிதம் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது விரைவில் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மாநிலங்களவை எம்.பி.க்கான இடம் காலியாக உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவிக்க இருக்கிறது.

Tags:    

Similar News