இந்தியா

கரையைக் கடந்தது பிபோர்ஜோய் புயல் - பாதிப்பு குறித்து குஜராத் முதல்வரிடம் கேட்டறிந்தார் பிரதமர் மோடி

Published On 2023-06-15 22:38 GMT   |   Update On 2023-06-15 23:07 GMT
  • புயல் கரை கடக்கத் தொடங்கியதையடுத்து பலத்த காற்றுடன் கனமழை பெய்தது.
  • பல்வேறு இடங்களில் மரங்கள் வேருடன் சாய்ந்தன. மின்கம்பங்களும் சாய்ந்துள்ளன.

அகமதாபாத்:

அரபிக் கடலில் உருவான பிபோர்ஜோய் புயல் அதிதீவிர புயலாக மாறியது. இந்தப் புயல் குஜராத் மாநில கடற்கரை மாவட்டமான கட்ச்- பாகிஸ்தானின் கராச்சி கடற்கரை இடையே கரையை கடக்கும் என வானிலை மையம் தெரிவித்தது. இதனால் குஜராத் மாநிலத்தில் கடற்கரையோரப் பகுதியில் இருந்து சுமார் 10 கி.மீட்டர் சுற்றுப்பகுதியில் வசிக்கும் மக்கள் அரசு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். சுமார் ஒரு லட்சம் மக்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டு, அரசின் தற்காலிக தங்குமிடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

புயல் காரணமாக நேற்றிலிருந்து காற்றுடன் மழை பெய்து வருகிறது. 6-க்கும் மேற்பட்ட மாநிலங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டது. பலத்த காற்று வீசும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டது.

தேசிய பேரிடர் மீட்புப்படையின் 15 குழுக்கள், 12 மாநில பேரிடர் மீட்புக்குழுக்கள், மாநில சாலை மற்றும் கட்டுமானத்துறையின் 115 குழுக்கள், மின்சாரத்துறையின் 397 குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டனர்.

இதற்கிடையே, ஏற்கனவே கணித்தபடி பிபோர்ஜோய் புயல் வடகிழக்கு நோக்கி நகர்ந்து நேற்று மாலை 4.30 மணியளவில் குஜராத் மாநிலம் சவுராஷ்டிரா மற்றும் கட்ச் கடலோர பகுதியில் கரைகடக்கத் தொடங்கியது. கரைகடக்கும் நிகழ்வு நள்ளிரவு வரை நீடித்தது.

கடலோரப் பகுதியில் மணிக்கு 110 முதல் 125 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியது.

புயல் கரை கடக்கத் தொடங்கியதையடுத்து பலத்த காற்றுடன், கனமழை பெய்து வருகிறது. பல்வேறு இடங்களில் மரங்கள் வேருடன் சாய்ந்தன. மின்கம்பங்களும் சாய்ந்துள்ளன.

இந்நிலையில், பிபோர்ஜோய் புயல் தாக்கியதில் பவ்நகர் மாவட்டத்தில் 2 பேர் பலியானார்கள். 22 பேர் காயமடைந்தனர். 23 விலங்குகள் உயிரிழந்தன. 500க்கும் மேற்பட்ட மரங்கள் சாய்ந்துள்ளன. மின் கம்பங்கள் சேதமடைந்துள்ளதால் சுமார் 900 கிராமங்களில் மின்சாரம் பாதிப்பு அடைந்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

சாலையில் விழுந்த மரங்களை அப்புறப்படுத்தும் பணியில் ராணுவத்தினர் மற்றும் பேரிடர் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், புயல் பாதிப்பு நிலவரம் குறித்து முதல் மந்திரி பூபேந்திர படேலிடம் பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக கேட்டறிந்தார்.

Tags:    

Similar News