இந்தியா

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற 31-ந்தேதி தொடக்கம்

Published On 2024-01-12 01:19 GMT   |   Update On 2024-01-12 01:19 GMT
  • பாராளுமன்ற தேர்தல் நடைபெறுவதால் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்படாது.
  • ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் உள்ளிட்ட அலுவல்கள் 9-ந்தேதி வரை நடைபெறுகிறது.

பாராளுமன்றம் ஆண்டுதோறும் 3 முறை கூடுகிறது. இதில் பட்ஜெட் கூட்டத்தொடர் ஆண்டின் தொடக்கத்தில் நடந்து வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டின் பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற 31-ந்தேதி தொடங்கும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன. பிப்ரவரி 9-ந்தேதி வரை இந்த தொடர் நடக்கிறது.

ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் பட்ஜெட் தொடரின் முதல் நாளில் இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றுகிறார்.

பின்னர் பொருளாதார ஆய்வறிக்கையை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அன்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்கிறார். மறுநாள், அதாவது பிப்ரவரி 1-ந்தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இந்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெறுவதால் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்படாது.

அதற்கு பதிலாக இடைக்கால பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். பாராளுமன்ற தேர்தல் நெருங்குவதால் பட்ஜெட்டில் கவர்ச்சிகரமான அறிவிப்புகள் இடம்பெறலாம் என கருதப்படுகிறது.

இதைத்தொடர்ந்து ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் உள்ளிட்ட அலுவல்கள் 9-ந்தேதி வரை நடைபெறுகிறது.

Tags:    

Similar News