இந்தியா

இந்தியாவின் முதல் புல்லட் ரெயில் சோதனை ஓட்டம் வெற்றி

Published On 2025-05-31 14:33 IST   |   Update On 2025-05-31 14:33:00 IST
  • ஜப்பானின் செண்டய் நகரில் பிரதான வழித்தடத்தில் புல்லட் ரெயில் சோதனை ஓட்டம் நடந்தது.
  • ரெயில்கள் இந்தியா வந்தவுடன் உள்நாட்டு நிலப்பரப்பு மற்றும் காலநிலை நிலைமைகளின் கீழ் கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்படும்.

புதுடெல்லி:

ரெயில்வே துறையை நவீனப்படுத்தும் நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இதில் அதிவேக புல்லட் ரெயில்களை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இந்தியாவில் முதல் புல்லட் ரெயில் சேவை மும்பை-அகமதாபாத் இடையே அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

இதையடுத்து இந்த வழித்தடத்தில் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. இந்தியாவின் புல்லட் ரெயில் திட்டத்துக்கு 2 ஷிங்கான்சென் புல்லட் ரெயில்களை ஜப்பான் பரிசளிக்கிறது. இந்தியா-ஜப்பான் கூட்டாண்மையின் ஒரு பகுதியாக புல்லட் ரெயில்களை இந்தியாவுக்கு பரிசளிக்க உள்ளது.

இந்த நிலையில் இந்தியாவுக்கான புல்லட் ரெயில் கட்டுமான பணி ஜப்பானில் இறுதிக் கட்டத்தை நெருங்கி உள்ளது. ஷிங்கான்சென் ரகத்தைச் சேர்ந்த இ-3, எல்-67 ஆகிய புல்லட் ரெயில்களின் சோதனை ஓட்டம் நடந்தது. இந்தியாவில் நிலவும் வெப்பம், புழுதி போன்ற சூழலுக்கேற்ப ஜப்பானில் இந்தச் சோதனை ஓட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

ஜப்பானின் செண்டய் நகரில் பிரதான வழித்தடத்தில் புல்லட் ரெயில் சோதனை ஓட்டம் நடந்தது. இந்த சோதனை ஓட்டம் வெற்றிகரமாக முடிந்தது. செண்டய் நகரில் சோதனை ஓட்டம் முடிவடைந்ததை அடுத்து அங்கிருந்து நைகாடா நகருக்கு புல்லட் ரெயில் அனுப்பி வைக்கப்படுகிறது.

பின்னர் நைகாடா துறைமுகத்தில் இருந்து கப்பல் மூலம் இந்தியாவுக்கு புல்லட் ரெயில்கள் அனுப்பி வைக்கப்பட உள்ளன. மணிக்கு 320 கி.மீ. வேகத்தில் இயக்க வடிவமைக்கப்பட்ட இந்த புல்லட் ரெயில்கள் அடுத்த ஆண்டின் தொடக் கத்தில் இந்தியாவிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரெயில்கள் இந்தியா வந்தவுடன் உள்நாட்டு நிலப்பரப்பு மற்றும் காலநிலை நிலைமைகளின் கீழ் கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்படும். குஜராத் மாநிலம் சூரத்-பிலிமோரா இடையே 50 கி.மீ. வேகத்தில் புல்லட் ரெயில் சோதனை ஓட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

குஜராத்தின் அகமதாபாத்-மகாராஷ்டிரா மும்பை இடையே 508 கி.மீ தொலைவுக்கு இயக்கப்படும் இந்தியாவின் முதல் புல்லட் ரெயில் பாதையின் அதிகபட்ச வேகம் மணிக்கு 320 கி.மீ. ஆகும். மொத்தமுள்ள 508 கி.மீ. தொலைவில் 348 கி.மீ. குஜராத்திலும், 156 கி.மீ. மகாராஷ்டிரத்திலும் உள்ளது. இதில் 21 கி.மீ. பகுதி நிலத்தடியிலும், 7 கி.மீ. கடல் சுரங்கப் பாதை வழியாகவும், 5 கி.மீ. மலை சுரங்கப்பாதை வழியாகவும் செல்லும். அகமதாபாத்-மும்பை இடையேயான தூரத்தை புல்லட் ரெயில் 2 மணி நேரம் 58 நிமிடங்களில் கடக்கும்.

Tags:    

Similar News