இந்தியா

கீதா பிரஸ் பதிப்பகத்துக்கு காந்தி அமைதி விருது - மத்திய அரசு அறிவிப்பு

Published On 2023-06-18 20:16 GMT   |   Update On 2023-06-18 21:17 GMT
  • உத்தர பிரதேசத்தின் கோரக்பூரில் உள்ள கீதா பிரஸ் பதிப்பகத்துக்கு காந்தி அமைதி விருது வழங்கப்படுகிறது.
  • இந்த பதிப்பகம், 14 மொழிகளில் 41 கோடியே 70 லட்சம் புத்தகங்களை வெளியிட்டுள்ளது.

புதுடெல்லி:

இந்திய விடுதலைக்காக அரும்பாடுபட்ட மகாத்மா காந்தியடிகளின் 125-வது பிறந்த நாளான 1995-ம் ஆண்டு இந்திய அரசு அவரது பெயரில் காந்தி அமைதி விருது வழங்குவது என முடிவு செய்து ஒவ்வொரு ஆண்டும் இந்த விருதுகளை வழங்கி வருகிறது.

இந்த விருது இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இந்திய தலைமை நீதிபதி மற்றும் பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்ட குழுவினரால் தேர்வு செய்யப்படுகிறது.

இந்நிலையில், கடந்த 2021-ம் ஆண்டுக்கான காந்தி அமைதி விருதை உத்தர பிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள கீதா பிரஸ் பதிப்பகத்துக்கு வழங்கப்படுகிறது.

இதுதொடர்பாக மத்திய கலாசார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில், கடந்த 1923-ம் ஆண்டு தொடங்கப்பட்ட கீதா பிரஸ், உலகின் மிகப் பெரிய பதிப்பகங்களில் ஒன்று. இந்த பதிப்பகம், 14 மொழிகளில் 41 கோடியே 70 லட்சம் புத்தகங்களை வெளியிட்டுள்ளது. அவற்றில், 16 கோடியே 21 லட்சம் பகவத் கீதை புத்தகங்களும் அடக்கம். காந்திய கொள்கை அடிப்படையில், சமுதாய கூட்டு மேம்பாட்டுக்காக இந்த பதிப்பகம் ஆற்றிய முக்கியமான, இணையற்ற பங்களிப்புக்காக காந்தி அமைதி விருதை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.

காந்தி அமைதி விருது 1 கோடி ரூபாய் பணம், சான்றிதழ், பதக்கம் மற்றும் தறியில் நெய்த பாரம்பரிய துணி, கைவினைப் பொருட்களை கொண்டது ஆகும்.

Tags:    

Similar News