இந்தியா

மரங்களில் மலர் அலங்காரம்: "பூங்காவனமாய்" மாறிய புதுடெல்லி

Published On 2023-09-09 02:59 GMT   |   Update On 2023-09-09 02:59 GMT
  • சுமார் ஆயிரத்து 200 மரங்களை டெல்லி மாநகராட்சி அலங்கரித்துள்ளது.
  • கண்காட்சியில் தமிழ்நாட்டின் பூம்புகார் கழகம் சார்பிலும் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் சார்பிலும் அரங்கு அமைக்கப்பட்டு உள்ளது.

புதுடெல்லி:

*'ஜி-20' மாநாட்டையொட்டி தலைநகர் டெல்லி பூங்காவனமாய் மாறியிருக்கிறது.

மரங்கள் எல்லாம் பூக்களாய் மலர்ந்திருக்கின்றன. ஆனால் இயற்கையாய் பூத்த பூக்கள் அல்ல. சாமந்தி, செவ்வந்தி, டெய்சி என பல வண்ணப்பூக்கள் டெல்லியின் சர்தார் படேல் உள்ளிட்ட முக்கியச் சாலைகளில் உள்ள மரங்களில் பொருத்தப்பட்டுள்ளன. சுமார் ஆயிரத்து 200 மரங்களை டெல்லி மாநகராட்சி இவ்வாறு அலங்கரித்துள்ளது.

* ஜி-20 இலச்சினை, அதன் முத்திரை வாக்கியமான 'வசுதைவ குடும்பகம்-ஒரு உலகம், ஒரு குடும்பம், ஒரு எதிர்காலம்'-மும் மலர்களை கொண்ட மலர்த்தட்டிகளில் உருவாக்கப்பட்டு முக்கிய இடங்களில் வைக்கப்பட்டிருக்கின்றன.

* 'வருக' என்பதும், 'வசுதைவ குடும்பகம்' என்பதும் ஜி-20 நாடுகளின் மொழிகளில் ஆங்காங்கே வரவேற்பு பலகைகளில் பொறிக்கப்பட்டிருக்கின்றன. அந்த வகையில் ஜெர்மன் முதல் ஸ்பானிஷ் வரையிலான பல மொழி பலகைகளை தலைநகரில் காணமுடிகிறது.

* மாநாட்டு மைதானத்தில் இந்திய பாரம்பரியத்தை உலக நாடுகள் தெரிந்து கொள்ளும் வகையில் பல்வேறு மாநிலங்களின் கண்காட்சி அரங்குகளும் திறக்கப்பட்டுள்ளன. இந்த கண்காட்சியில் தமிழ்நாட்டின் பூம்புகார் கழகம் சார்பிலும் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் சார்பிலும் அரங்கு அமைக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தின் பலவகை கைத்தறி துணி வகைகள், பல்வேறு தொன்மைப் பொருட்கள், மாமல்லபுரம் கல் சிற்பங்கள், கள்ளக்குறிச்சி மரவேலைப்பாட்டு பொருட்கள், நாச்சியார் கோவில் பித்தளை விளக்குகள், தஞ்சாவூர் பொம்மை, கலை தட்டுக்கள், ஓவியங்கள், பத்தமடை பாய்கள், வடசேரி கோவில் நகைகள் மற்றும் மயிலாடி கல் பொருட்கள் போன்றவை இடம்பெற்று உள்ளன.

* வெடிகுண்டுகளும், துப்பாக்கிகளும் நிறைந்த ஓர் ஆட்டோ, ஜி-20 மாநாடு நடைபெறும் பிரகதி மைதானம் நோக்கிச் செல்கிறது என்று ஒருவர், சமூக வலைதளத்தில் வெடிகுண்டு புரளியை கிளப்பினார். அதிரடி நடவடிக்கையில் இறங்கிய போலீசார், நேற்று அந்த நபரை தேடிக் கண்டுபிடித்து, கைது செய்தனர்.

Tags:    

Similar News