இந்தியா

உ.பி.யில் வக்கீல் கொலை வழக்கில் முன்னாள் எம்.பி. அத்திக் அகமதுவின் மைத்துனர் கைது

Published On 2023-04-02 06:44 GMT   |   Update On 2023-04-02 12:15 GMT
  • பால் கடத்தல் வழக்கில் பிரயாக் ராஜில் உள்ள சிறப்பு கோர்ட்டில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தீர்ப்பு வழங்கப்பட்டது.
  • போதிய ஆதாரம் இல்லாததால் அத்திக் அகமதுவின் தம்பி காலித் ஆசிம் உள்பட 7 பேர் வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர்.

உத்தரபிரதேச மாநிலத்தில் கடந்த 2005-ம் ஆண்டு பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ. ராஜூபால் மர்ம நபர்களால் கொல்லப்பட்டார்.

இந்த வழக்கில் முன்னாள் எம்.பி.யும், முன்னாள் ரவுடியுமான அத்திக் அகமது உள்ளிட்டோர் மீது குற்றம் சாட்டப்பட்டது. கொலை வழக்கின் முக்கிய சாட்சியாக வக்கீல் உமேஷ்பால் இருந்தார். கடந்த 2006-ம் ஆண்டு பிப்ரவரி 28-ந் தேதி அவர் கடத்தப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டார். பின்னர் அவர் விடுவிக்கப் பட்டது.

இந்த கடத்தல் சம்பவம் தொடர்பாக அத்திக் அகமது உள்ளிட்ட 10 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதற்கிடையே கடந்த பிப்ரவரி 24-ந் தேதி உமேஷ் பால் துப்பாக்கியால் சுடப்பட்டு கொல்லப்பட்டார். இந்த வழக்கில் அத்திக் அகமது முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டார்.

இந்நிலையில் உமேஷ் பால் கடத்தல் வழக்கில் பிரயாக் ராஜில் உள்ள சிறப்பு கோர்ட்டில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தீர்ப்பு வழங்கப்பட்டது. இதற்காக குஜராத்தின் சபர்மதி சிறையில் அடைக்கப்பட்டு இருந்த அத்திக் பலத்த பாதுகாப்புடன் கோர்ட்டுக்கு கொண்டு வரப்பட்டார்.

17 ஆண்டுகளாக நீடிந்த இந்த வழக்கில் அத்திக் அகமது மற்றும் அவரது கூட்டாளி கள் கான் சவுலத், தினேஷ் பாசி ஆகியோரும் ஆயுள் தண்டனையும், தலா ரூ.1 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. போதிய ஆதாரம் இல்லாததால் அத்திக் அகமதுவின் தம்பி காலித் ஆசிம் உள்பட 7 பேர் வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர்.

5 முறை எம்.எல்.ஏ.வாகவும், ஒரு முறை எம்.பி.யாகவும் பதவி வகித்துள்ள அத்திக் அகமது மீது 101 வழக்குகள் நிலுவையில் உள்ளன. முதல் முறையாக ஆள் கடத்தல் வழக்கில் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு இருந்தது.

உ.பி. போலீசார் தன்னை என்கவுண்டரில் கொல்ல திட்டமிட்டு இருப்பதாகவும், இதனால் சிறப்பு பாதுகாப்பு விதிக்க வேண்டும் என்றும் அத்திக் அமகது சுப்ரீம் கோர்ட்டில் முறையிட்டார். ஐகோர்ட்டை அணுக அறிவுறுத்தி நீதிபதிகள் அவரது மனுவை தள்ளுபடி செய்தனர்.

இந்நிலையில் வக்கீல் உமேஷ் பால் கொலை வழக்கில் அத்திக் அகமதுவின் மைத்துனர் அக்லாப் அகமது கைது செய்யப்பட்டுள்ளார்.

உத்தரபிரதேச சிறப்பு படை போலீசாரும் பிரயாக்ராஜ் போலீசாரும் இணைந்து அவரை பிடித்தனர். வக்கீல் கொலை வழக்கில் இவர் முக்கிய பங்கு வகித்துள்ளார். உமேஷ் பாலை துப்பாக்கியால் சுட்ட கொலையாளிக்கு இவர்தான் பணம் கொடுத்துள்ளார். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News