இந்தியா

கேரள குண்டு வெடிப்பில் பலியானோர் எண்ணிக்கை 6 ஆக உயர்வு

Published On 2023-11-17 10:33 IST   |   Update On 2023-11-17 12:11:00 IST
  • மலையாற்றூர் பகுதியைச் சேர்ந்த பிரதீப் என்பவரின் மகன் பிரவீன்(வயது26) என்பவர் குண்டு வெடிப்பில் பலத்த காயம் அடைந்து சிகிச்சை பெற்று வந்தார்.
  • குண்டு வெடிப்பில் ஏற்கனவே பலியான லிபினா மற்றும் ரீனா ஆகியோர் பிரவீனின் சகோதரி மற்றும் தாய் ஆவர்.

திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் களமச்சேரியில் கடந்த மாதம் 29-ந்தேதி கிறிஸ்தவ பிரார்த்தனை கூட்டத்தில் குண்டுவெடித்தது. இதில் 3 பேர் பலியான நிலையில், படுகாயம் அடைந்தவர்களில் 12 வயது சிறுமி உள்பட மேலும் இருவர் அடுத்தடுத்து இறந்தனர்.

கேரளா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தை அறங்கேற்றிய கொச்சியை சேர்ந்த டொமினிக் மார்ட்டினை போலீசார் கைது செய்தனர். அவரிடம் போலீசார் மற்றும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினார்கள்.

சிறையில் அடைக்கப்பட்ட டொமினிக் மார்ட்டினை போலீசார் காவலிலும் எடுத்து விசாரித்தார்கள். அதில் குண்டுவெடிப்பு சதியை நிறைவேற்றியது எப்படி? என்பது குறித்த பல்வேறு தகவல்களை போலீசாரிடம் அவர் தெரிவித்தார்.

போலீஸ் காவல் முடிந்ததால் கடந்த 15-ந்தேதி மீண்டும் கோர்ட்டில் டொமினிக் மார்ட்டின் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை வருகிற 29-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதை தொடர்ந்து, அவர் மீண்டும் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் களமச்சேரி குண்டு வெடிப்பில் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றவர்களில் மேலும் ஒருவர் இறந்துள்ளார். மலையாற்றூர் பகுதியைச் சேர்ந்த பிரதீப் என்பவரின் மகன் பிரவீன்(வயது26) என்பவர் குண்டு வெடிப்பில் பலத்த காயம் அடைந்து சிகிச்சை பெற்று வந்தார்.

அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதனால் களமச்சேரி குண்டு வெடிப்பில் பலியானோர் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. குண்டு வெடிப்பில் ஏற்கனவே பலியான லிபினா மற்றும் ரீனா ஆகியோர் பிரவீனின் சகோதரி மற்றும் தாய் ஆவர்.

களமச்சேரி குண்டு வெடிப்பில் காயம் அடைந்தவர்களில் 11 பேர் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சையில் உள்ளனர். அவர்களில் 6 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News