இந்தியா

பிளாக்கில் விற்ற லாட்டரிக்கு பரிசு: 7 பேர் குழுவின் விசாரணைக்கு பிறகே ரூ.25 கோடி பரிசு வழங்கப்படும்- கேரளா அறிவிப்பு

Published On 2023-09-30 09:21 GMT   |   Update On 2023-09-30 09:21 GMT
  • பரிசு பெற்றவர் எந்த ஏஜன்சியில் இருந்து லாட்டரியை வாங்கினார் என்பது குறித்தும் விசாரணை நடத்தப்படும்.
  • குழுவின் தீவிர விசாரணைக்கு பிறகே பரிசுத் தொகை வழங்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம்:

கேரள அரசு லாட்டரித்துறை சார்பில் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. சமீபத்தில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு பம்பர் பரிசு குலுக்கல் நடத்தப்பட்டது. இதில் முதல் பரிசான ரூ.25 கோடி, தமிழகத்தின் திருப்பூரை சேர்ந்த பாண்டியராஜன் உள்பட 4 பேர் வாங்கிய டிக்கெட்டுக்கு கிடைத்தது.

இது உறுதி செய்யப்பட்ட நிலையில் பரிசு பணத்தை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பரிசுக்கான லாட்டரி சீட்டு பிளாக்கில் தமிழகத்தில் விற்கப்பட்டுள்ளது. அதனை தான் வாங்கி உள்ளனர். எனவே அவர்களுக்கு பரிசு தொகை வழங்கக்கூடாது என்று தமிழகத்தை சேர்ந்த அம்புரோஸ் என்பவர், கேரள முதல்-மந்திரி பினராய் விஜயனுக்கு கடிதம் எழுதி உள்ளார். மேலும் பரிசு பணத்தை சமூக சேவைக்கு பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், இது குறித்து கேரள லாட்டரித்துறை விளக்கம் அளித்துள்ளது. அதில், சட்டப்படி கேரள லாட்டரியை மற்ற மாநிலங்களில் விற்க முடியாது. பரிசு வென்றவர் கேரளா வருவதற்கான காரணங்களும் சரிபார்க்கப்படும். பரிசு பெற்றவர் எந்த ஏஜன்சியில் இருந்து லாட்டரியை வாங்கினார் என்பது குறித்தும் விசாரணை நடத்தப்படும்.

லாட்டரி துறை இணை இயக்குநர், நிதி அதிகாரி உள்ளிட்ட 7 பேர் கொண்ட சிறப்பு குழு விசாரணை நடத்திய பிறகே பரிசுத் தொகை வழங்கப்படும். தற்போது பம்பர் லாட்டரி பரிசுச்சீட்டு குறித்து புகார் வந்துள்ளதால், இந்த குழுவின் தீவிர விசாரணைக்கு பிறகே பரிசுத் தொகை வழங்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News