இந்தியா

ராணுவ வாகனம் மீது குண்டு வீச்சு: 5 வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு ஜெய்ஷ் பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்பு

Published On 2023-04-21 07:22 GMT   |   Update On 2023-04-21 07:30 GMT
  • தாக்குதலில் ராணுவ வாகனம் தீப்பிடித்து எரிந்தது. இதில் 5 ராணுவ வீரர்கள் பரிதாபமாக இறந்தனர்.
  • கண்டுபிடிக்கும் பணியில் ராணுவ உயர் அதிகாரிகள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

ஜம்மு:

காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் பகுதியில் ராணுவ வாகனம் மீது துப்பாக்கியால் சுட்டும், கையெறி குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த தாக்குதலில் ராணுவ வாகனம் தீப்பிடித்து எரிந்தது. இதில் 5 ராணுவ வீரர்கள் பரிதாபமாக இறந்தனர்.

தேசிய ரைபிள்ஸ் படையை சேர்ந்த வீரர்கள் பலர் படுகாயம் அடைந்தனர். சம்பவம் நடந்த போது மழை பெய்து கொண்டிருந்தது.

காஷ்மீரில் நடந்த தாக்குதல் குறித்து தெரியவந்தும் ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங், உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோர் உயர் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசினர்.

மேலும் தாக்குதலில் ஈடுபட்டவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டனர்.

இதற்கிடையே பூஞ்ச் பகுதியில் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாத அமைப்பினர் குறித்து ராணுவ அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர். வடக்கு பிராந்திய ராணுவ படை தலைமையகம் சார்பில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் பூஞ்ச் தாக்குதலுக்கு ஜெய்ஷ் தீவிரவாத இயக்கம் பொறுப்பு ஏற்றுள்ளது. இது தொடர்பாக அந்த அமைப்பினர் கூறும்போது, ஜெய்ஷ் ஆதரவு பயங்கரவாத அமைப்பினர் இந்த தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்பட்டு உள்ளது.

அவர்களை கண்டுபிடிக்கும் பணியில் ராணுவ உயர் அதிகாரிகள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

Tags:    

Similar News