இந்தியா

ரெயிலுக்கும் பிளாட்பாரத்துக்கும் இடையில் சிக்கிய மாணவி ஆஸ்பத்திரியில் உயிரிழப்பு

Published On 2022-12-09 06:14 GMT   |   Update On 2022-12-09 09:11 GMT
  • எதிர்பாராத விதமாக கால் தவறி, ரெயிலுக்கும், பிளாட்பாரத்துக்கும் இடையில் சசிகலா விழுந்தார்.
  • சசிகலாவை டாக்டர்கள் பரிசோதனை செய்ததில் அவரது இடுப்பு எலும்புகள் நொறுங்கி இருப்பது தெரியவந்தது.

திருப்பதி:

ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டம், அன்னவரம் பகுதியை சேர்ந்தவர் சசிகலா (வயது 20). இவர் விசாகப்பட்டினம் அருகே உள்ள துவ்வாடா எனும் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் எம்.சி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

இவர் தினமும் தனது ஊரில் இருந்து ரெயில் மூலமாக கல்லூரிக்கு சென்று வருவது வழக்கம்.

நேற்று முன்தினம் சசிகலா வழக்கம்போல் குண்டூர்-ராயகடா எக்ஸ்பிரஸ் ரெயிலில் கல்லூரிக்கு சென்று துவ்வாடா ரெயில் நிலையத்தில் மாணவி இறங்கினார். அப்போது எதிர்பாராத விதமாக கால் தவறி, ரெயிலுக்கும், பிளாட்பாரத்துக்கும் இடையில் விழுந்தார்.

அவரது இடுப்பு பகுதி பிளாட்பாரத்துக்கும், ரெயிலுக்கும் இடையில் சிக்கியது. இதனால் அவரால் வெளியே வர முடியவில்லை. 2 மணி நேரம் அவர் அங்கு போராடினார்.

இதையடுத்து பிளாட்பாரத்தை இடித்து சசிகலாவை மீட்டு விசாகப்பட்டினம் கிம்ஸ் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சசிகலாவை டாக்டர்கள் பரிசோதனை செய்ததில் அவரது இடுப்பு எலும்புகள் நொறுங்கி இருப்பது தெரியவந்தது.

அவருக்கு உடனடியாக எலும்பு முறிவு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அப்போது சசிகலா உடலில் நோய் தொற்று ஏற்பட்டு அபாய நிலைக்கு சென்றார். அவரது கிட்னியில் ரத்த கசிவு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

டாக்டர்கள் சசிகலாவுக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் ஆந்திராவில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News