இந்தியா

"ஆப்ரேஷன் அஜய்"-ன் கீழ் இந்தியர்களை அழைத்து வர தயார் நிலையில் அடுத்த விமானம்

Published On 2023-10-20 15:35 GMT   |   Update On 2023-10-20 15:36 GMT
  • காசாவில் இருந்து இந்தியர்களை தற்போது வெளியேற்றுவது கடினம்.
  • இந்திய மக்கள் விரைவாக பயணப் படிவத்தை நிரப்புமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இதனிடையே இஸ்ரேலில் சிக்கியுள்ள இந்தியர்களை பத்திரமாக மீட்பதற்காக 'ஆபரேஷன் அஜய்' என்ற திட்டத்தை இந்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இதன்படி இஸ்ரேலில் இருந்து சிறப்பு விமானங்கள் மூலம் இந்தியர்கள் பத்திரமாக அழைத்து வரப்படுகின்றனர்.

இதுதொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அரிந்தம் பக்ஷி இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், இஸ்ரேலில் இருந்து இதுவரை 5 சிறப்பு விமானங்களில் மொத்தம் 1,200 இந்தியர்கள் அழைத்து வரப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

அதே சமயம் காசாவில் இருந்து இந்தியர்களை தற்போது வெளியேற்றுவது கடினம் என்று அவர் கூறியிருந்தார்.

இந்நிலையில், "ஆப்ரேஷன் அஜய்" திட்டத்தின் கீழ் அடுத்த விமானம் இஸ்ரேலில் உள்ள டெல் அவ்விலிருந்து டெல்லிக்கு அக்டோபர் 22-ம் தேதி வர உள்ளதாக தகவல் வௌியாகியுள்ளது.

அங்குள்ள இந்தியர்கள் பயணப் படிவத்தை ஏற்கனவே பூர்த்தி செய்த நிலையில், தூதரகம் உறுதிப்படுத்துவதற்கான மின்னஞ்சல்களை அனுப்பியுள்ளது என்றும் இந்த விமானத்தைப் பயன்படுத்த விரும்பும் பிற இந்திய மக்கள் விரைவாக பயணப் படிவத்தை நிரப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News