இந்தியா

ம.பி.யில் சோகம்: 150 ஆண்டுகள் பழமையான கிணற்றில் விஷவாயு தாக்கியதில் 8 பேர் பலி

Published On 2025-04-04 08:57 IST   |   Update On 2025-04-04 08:57:00 IST
  • கிணற்றை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு இருந்த போது திடீரென விஷவாயு தாக்கியது.
  • மீட்புக்குழுவினர் சுமார் 4 மணி நேரம் போராடி 8 பேரின் உடல்களையும் மீட்டனர்.

மத்தியப் பிரதேசத்தில் 150 ஆண்டுகள் பழமையான கிணற்றில் இருந்து விஷவாயு தாக்கியதில் 8பேர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மத்திய பிரதேசம் மாநிலம் கொண்டாவத் கிராமத்தில் கங்கௌர் திருவிழாவிற்காக கிராம மக்கள் தயாராகிக் கொண்டிருந்தனர். இந்த திருவிழாவின் ஒரு பகுதியாக பழமையான கிணற்றில் சுவாமி சிலைகளை மூழ்கடிப்பர். இதனால் அந்த கிராமத்தில் இருந்த 150 ஆண்டுகள் பழமையான கிணற்றை தயார் செய்வதற்காக 5 பேர் இறங்கியுள்ளனர். அவர்கள் கிணற்றில் இறங்கி கிணற்றை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு இருந்த போது திடீரென விஷவாயு தாக்கியது. இதனால் அவர்கள் கிணற்றில் மூழ்கத் தொடங்கினர். இதனை பார்த்து அவர்களுக்கு உதவுவதற்காக 3 பேர் கிணற்றில் இறங்கினர். அவர்களையும் விஷவாயு தாக்கியது.

இதனை தொடர்ந்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பேரிடர் மீட்புக்குழுவினர் சுமார் 4 மணி நேரம் போராடி 8 பேரின் உடல்களையும் மீட்டனர். இந்த சம்பவம் கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ் இரங்கல் தெரிவித்ததுடன், இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் அறிவித்தார். மேலும், இந்த சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

Tags:    

Similar News