இந்தியா

கைது செய்யப்பட்டவர்களை காணலாம்.

திருப்பதியில் இருந்து சென்னைக்கு கடத்திய ரூ.2 கோடி மதிப்பிலான செம்மரம் பறிமுதல்- 44 பேர் கைது

Published On 2022-12-01 05:38 GMT   |   Update On 2022-12-01 05:38 GMT
  • திருப்பதியில் இருந்து சென்னை நோக்கி கார் மற்றும் 2 லாரிகள் ஒன்றன்பின் ஒன்றாக வந்தன.
  • கைது செய்யப்பட்டவர்கள் திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த கூலி தொழிலாளர்கள்.

திருப்பதி:

திருப்பதி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் லாரியில் செம்மரம் கடத்தி செல்வதாக திருப்பதி எஸ்.பி.பரமேஸ்வரர் ரெட்டிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அவரது உத்தரவின்பேரில் டி.எஸ்.பி. ராமராஜூ மேற்பார்வையில் பாக்ராப்பேட்டை இன்ஸ்பெக்டர் துளசிராம், புத்தூர் இன்ஸ்பெக்டர் அசோக் குமார், வடமால பேட்டை ராமாஞ்ச நேயலு, நாராயண வனம் எஸ்.ஐ பரமேஷ் நாயக் உள்ளிட்ட போலீசார் 2 குழுக்களாக பிரிந்து திருப்பதி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது திருப்பதியில் இருந்து சென்னை நோக்கி கார் மற்றும் 2 லாரிகள் ஒன்றன்பின் ஒன்றாக வந்தன. திடீரென போலீசாரை பார்த்ததும் வாகனங்களில் இருந்து சிலர் கீழே குதித்து ஓட முயன்றனர்.

அவர்களை பிடிக்க முயன்ற போலீசாரை தாக்கி விட்டு தப்பி ஓடினர். இருப்பினும் போலீசார் 2 டிரைவர்கள் மற்றும் 42 கூலி தொழிலாளர்களையும் மடக்கிப் பிடித்து கைது செய்தனர். இதில் முக்கிய குற்றவாளிகள் 2 பேர் தப்பிச் சென்றனர்.

லாரியில் இருந்து 11 கோடாரிகள், 32 ரம்பம், 2 லாரி, 1 கார், 2.6 டன் எடை கொண்ட ரூ.2 கோடி மதிப்புள்ள 81 செம்மரங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

கைது செய்யப்பட்டவர்கள் திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த கூலி தொழிலாளர்கள் என்பது தெரியவந்தது.

தப்பி ஓடிய முக்கிய குற்றவாளிகள் கூலி தொழிலாளர்களை சேஷாசலம் வனப்பகுதிக்கு அழைத்துச் சென்று செம்மரங்களை வெட்டி சென்னை மற்றும் பெங்களூருவில் உள்ள பெரிய கடத்தல்காரர்களுக்கு சப்ளை செய்தது தெரியவந்தது.

இதுகுறித்து வடமாலைபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து கைதான அனைவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News