இந்தியா
ஏர்இந்தியா

நிறைய மேக்கப் போடாதீர்கள், அதிக நகைகள் அணிய வேண்டாம்- ஏர்இந்தியா விமான பணிப்பெண்களுக்கு உத்தரவு

Published On 2022-02-14 10:17 IST   |   Update On 2022-02-14 11:54:00 IST
பயணிகள் விமானங்களில் விரைவாக ஏறுவதற்கும், இருக்கையில் அமருவதற்கும் பணிப்பெண்கள் உதவுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
புதுடெல்லி:

ஏர்இந்தியா விமான சேவை சமீபத்தில் டாடா நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து அந்த நிறுவனம் விமான சேவையை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

விமானங்களை தாமதம் இன்றி இயக்குவதற்காக பணிப்பெண்கள் மற்றும் ஊழியர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை டாடா நிறுவனம் விதித்துள்ளது. அதன்படி பயணிகள் விமானங்களில் ஏறும்போது பணிப்பெண்கள் மற்றும் ஊழியர்கள் சாப்பிடுவதோ அல்லது பானங்கள் அருந்துவதோ கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுங்கம் மற்றும் பாதுகாப்பு சோதனைகளில் தாமதம் ஏற்படுவதை தடுக்க நிறைய மேக்கப் போடக்கூடாது என்றும் அதிக நகைகள் அணிய வேண்டாம் என்றும் குறைந்தபட்ச நகைகளை அணியவேண்டும் என்றும் பணிப்பெண்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

பயணிகள் விமானங்களில் விரைவாக ஏறுவதற்கும், இருக்கையில் அமருவதற்கும் பணிப்பெண்கள் உதவுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

கட்டுப்பாட்டு அறை பரிசோதனை கவுண்டர்களில் பயணிகளை நீண்ட நேரம் காத்திருக்க அனுமதிக்கக்கூடாது. சோதனைகளை விரைவாக முடிக்க வேண்டும்.

குறிப்பிட்ட நேரத்திற்குள் பயணிகள் விமானத்தில் ஏறுவதற்கான அனுமதியை வழங்கவேண்டும். எந்த காரணத்துக்காகவும் பயணிகள் விமானத்தில் ஏறுவதை தாமதப்படுத்தக்கூடாது.

சரியான நேரத்தில் ஊழியர்கள் மற்றும் பணிப்பெண்கள் விமானத்துக்கு செல்ல வேண்டும். எந்தவொரு நடவடிக்கையின் காரணமாக விமானம் புறப்படுவதில் தாமதம் ஏற்படக்கூடாது.

இவ்வாறு ஊழியர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

Similar News