இந்தியா
குடியரசு தின விழாவில் தமிழக ஊர்திக்கு அனுமதி மறுப்பு -மத்திய அரசு விளக்கம்
எந்தெந்த மாநிலங்களின் ஊர்திகள் பங்கேற்க வேண்டும் என்பதை மத்திய அரசு முடிவு செய்வதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
குடியரசு தின விழாவை முன்னிட்டு தலைநகர் டெல்லியில் வரும் 26-ம் தேதி பிரம்மாண்ட அணிவகுப்பு நடைபெறுகிறது. இதில் தமிழகத்தின் அலங்கார ஊர்தி பங்கேற்க அனுமதி வழங்கப்படவில்லை. கொரோனா பெருந்தொற்று உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பங்கேற்கும் மாநிலங்களின் எண்ணிக்கை 12 ஆக குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. தமிழக ஊர்திக்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாட்டிலிருந்து நாட்டின் விடுதலைக்காகப் போராடிய வ.உ.சி., மகாகவி பாரதியார், இராணி வேலுநாச்சியார், மருது சகோதரர்கள் ஆகிய விடுதலைப் போராட்ட வீரர்களின் உருவங்கள் அடங்கிய ஊர்தி இடம்பெறுவது மறுக்கப்பட்டு இருப்பது ஏமாற்றம் அளிப்பதாக முதல்வர் ஸ்டாலின் பிரதமருக்கு கடிதம் எழுதி உள்ளார்.
அலங்கார ஊர்திகள் தேர்வு தொடர்பாக சர்ச்சை எழுந்த நிலையில், மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. எந்தெந்த மாநிலங்களின் ஊர்திகள் பங்கேற்க வேண்டும் என்பதை மத்திய அரசு முடிவு செய்வதில்லை என மத்திய அரசு கூறி உள்ளது.
மாநிலங்கள் மற்றும் மத்திய அமைச்சகங்களிடமிருந்து பெறப்பட்ட 56 பரிந்துரைகளில் 21 மட்டுமே தேர்வு செய்யப்பட்டன என்றும், தமிழ்நாடு, கேரளா மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களின் முன்மொழிவுகள் உரிய விவாதங்களுக்குப் பிறகே நிபுணர் குழு நிராகரித்ததாகவும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.