செய்திகள்
காயத்ரி பிரசாத் பிரஜாபதி

கூட்டு கற்பழிப்பு வழக்கு: உ.பி. முன்னாள் மந்திரிக்கு வாழ்நாள் சிறைத்தண்டனை

Published On 2021-11-12 17:23 GMT   |   Update On 2021-11-12 17:23 GMT
அலுவலக வீட்டில் பெண்ணை கும்பலாக கற்பழித்ததுடன், அவரது 17 வயது மகளை கற்பழிக்க முயன்றதாகவும் குற்றம்சாட்டப்பட்ட வழக்கில் உ.பி. முன்னாள் மந்திரிக்கு நீதிமன்றம் தண்டனை வழங்கியுள்ளது.
உத்தர பிரதேச மாநிலத்தில் கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 18-ந்தேதி சித்ராகூட்டை சேர்ந்த பெண்மணி ஒருவர் உத்தர பிரதேச மாநில அப்போதைய மந்திரி காயத்ரி பிரசாத் பிரஜாபதி மற்றும் அவருடைய கூட்டாளிகள் 6 பேர் மீது புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரில் காயத்திரி பிரசாத் மற்றும் அவரது கூட்டாளிகள் தன்னை, மந்திரி அலுவலக வீட்டில் வைத்து கற்பழித்ததாகவும், தனது 17 வயது மகளை பலாத்காரம் செய்ய முயன்றதாகவும் குறிப்பிட்டிருந்தார். 

இந்த புகார் தொடர்பாக உச்சநீதிமன்றம், லக்னோ போலீஸ், மந்திரி மீது கற்பழிப்பு வழக்கு மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து முறையாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று உத்தரவிட்டது.

இந்த வழக்கு மந்திரி மற்றும் எல்.எல்.ஏ.-க்கள் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் விசாரணை நடத்தி, கடந்த புதன்கிழமை (நேற்றுமுன்தினம்) காயத்ரி பிரசாத் பிரஜாபதி, ஷுக்லா, திவாரி ஆகியோர் குற்றவாளி என்று அறிவித்தது. விகாஸ் வர்மா, அம்ரேந்த்ர சிங், சந்திரபால், ரூபேஷ்வர் ஆகியோரை விடுதலை செய்தது.

தண்டனை இன்று வழங்கப்படும் என தெரிவித்திருந்தது. அதன்படி இன்று தணடனை அறிவிக்கப்பட்டது. குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட மூன்று பேருக்கும் வாழ்நாள் சிறை தண்டனையுடன், 2 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து கோர்ட் தீர்ப்பு அளித்துள்ளது.

காயத்ரி பிரசாத் பிரஜாபதி 2015 முதல் 2016 வரை சமாஜ்வாடி கட்சி ஆட்சி செய்யும்போது சுரங்கத்துறை மந்திரியாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News