செய்திகள்
வளர்ப்பு நாய்

வருகிற 15-ந்தேதிக்குள் வளர்ப்பு நாய்களுக்கு ‘மைக்ரோ சிப்’ பொருத்த பெங்களூரு மாநகராட்சி கெடு

Published On 2021-11-10 02:24 GMT   |   Update On 2021-11-10 02:24 GMT
நடைபாதைகளில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் நாய்களின் இயற்கை உபாதையை கழிக்க செய்தால் உரிமையாளருக்கு நாள் ஒன்றுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும்.
பெங்களூரு

பெங்களூரு மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த 2017-ம் ஆண்டு ஆய்வின்படி 80 ஆயிரம் வளர்ப்பு நாய்கள் இருப்பது தெரியவந்தது. கட்டாயம் உரிமம் பெற்றப் பின்னரே வளர்ப்பு நாய்களை வளர்க்க வேண்டும் என்ற அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தவிர்க்க முடியாத காரணங்களுக்காக வளர்ப்பு நாய்களுக்கு உரிமம் வழங்குவது நிறுத்தப்பட்டது.

தற்போது வளர்ப்பு நாய்களின் உரிமையாளர்கள் அவற்றுக்கு உடல் நலக்குறைவு அல்லது வயது முதிர்ச்சி ஆனால் அவற்றை வீதிகளில் விட்டு விடுகின்றனர். இதனால், சாலைகளில் வளர்ப்பு நாய்கள் இறந்து கிடப்பதை காண முடிகிறது.

நடைபயிற்சி என்ற பெயரில் சாலை ஓரங்களில் நடைபாதைகளில் நாய்களை அழைத்துச் செல்வோர் அவைகளை இயற்கை உபாதை கழிக்க வைக்கின்றனர். இதனால், நடைபாதைகளில் பொதுமக்கள் நடக்க முடியாத நிலை ஏற்படுகிறது. இதுபோன்ற அவலநிலைகளை தடுக்க மாநராட்சி அதிரடியான திட்டம் ஒன்றை தயார் செய்துள்ளது. இதுகுறித்து பெங்களூரு மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:-

வளர்ப்பு நாய்களுக்கு உரிமம் அளிக்க மீண்டும் முடிவு செய்துள்ளது. அதாவது, வருகிற 15-ந் தேதிக்குள் வளர்ப்பு நாய்கள் வைத்துள்ள அனைவரும் கட்டாயம் மைக்ரோ சிப் பொருத்தவேண்டியது அவசியம்.

அலுவலகம், வீடு அல்லது அடுக்குமாடி குடியிருப்பு போன்றவற்றில் ஒரே ஒரு நாயை மட்டும் வளர்க்க அனுமதி வழங்கப்படும். வெளிநாட்டு நாய்களுக்கு இந்த மைக்ரோ சிப் பொருத்த அனுமதி கட்டாயம். இந்திய நாய்களை வளர்க்க உரிமம் தேவையில்லை. ஆனால், மைக்ரோசிப் பொருத்தவேண்டும். வளர்ப்பு நாய்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்ய அதிகாரிகள் வரும்போது அதற்கு இடையூறு செய்தால் சம்பந்தப்பட்டவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். சாலை அருகே நடைபாதைகளில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் நாய்களின் இயற்கை உபாதையை கழிக்க செய்தால் உரிமையாளருக்கு நாள் ஒன்றுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும்.

இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News