செய்திகள்
முதியவர்

கொரோனாவுடன் 2 முறை போராடி மீண்ட 90 வயது முதியவர்

Published On 2021-04-24 07:23 IST   |   Update On 2021-04-24 07:23:00 IST
மகாராஷ்டிராவில் கொரோனாவுக்கு 2 முறை ஆளான முதியவர் இரண்டு முறையும் அதில் இருந்து மீண்டு வந்துள்ளார். கொரோனா நோய்க்கு எதிரான தனது போராட்டம் குறித்தும், நோயை வென்ற ரகசியம் குறித்தும் அவர் கூறியதை பார்க்கலாம்.
அவுரங்காபாத் :

மகாராஷ்டிரா மாநிலத்தை கொரோனா அரக்கன் சித்ரவதை செய்து வருகிறான். தினமும் மாநிலத்தில் ஏற்படும் அதிகப்படியான பாதிப்பு, உயிரிழப்பு மக்களை பீதிக்குள்ளாக்கி வருகிறது.

இருப்பினும் கொரோனா நோயில் இருந்து மீண்டுவர வயது ஒரு தடையில்லை என்பதை இங்குள்ள பீட் மாவட்டத்தை சேர்ந்த 90 வயது முதியவர் பாண்டுரங் ஆத்மராம் என்பவர் நிரூபித்து உள்ளார். 2 முறை கொரோனா தொற்றுக்கு ஆளான அவர், இந்த கொடிய நோயை வெற்றிகரமாக எதிர்கொண்டு பலருக்கு நம்பிக்கையை அளித்துள்ளார்.

உலகெங்கும் பலரை தனது கோரப்பசிக்கு இரையாக்கி வரும் கொரோனா நோய்க்கு எதிரான தனது போராட்டம் குறித்தும், நோயை வென்ற ரகசியம் குறித்தும் அவர் கூறியதாவது:-



நான் முதல்முறை நோய் தொற்றுக்கு ஆளான போது நோயின் தீவிரம் குறைவாக இருந்தது. இருப்பினும் இரண்டாவது முறை மீண்டுவந்த பாதை அவ்வளவு எளிதானதாக இல்லை.

இன்றைய இளைஞர்கள் எளிதில் போதை பழக்கத்திற்கு அடிமையாக விடுகிறார்கள். மேலும் ஆரோக்கியமாக இருக்க உடற்பயிற்சி செய்வதில்லை. நான் தவறாமல் நடைப்பயிற்சி செல்கிறேன். மன அழுத்தமில்லாத வாழ்க்கையை வாழ்ந்து வருகிறேன். இது எனக்கு கொரோனாவில் இருந்து விடுபட பெரிதும் உதவியது.

எனக்கு ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை வழங்கப்பட்டபோதும் நான் நம்பிக்கையை இழக்கவில்லை. என் உடல்நலம் மற்றும் உணவில் கவனத்தை செலுத்தினேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர் கூறுகையில், “பாண்டுரங் ஆத்மராம் மன ரீதியாக மிகவும் வலுவாக இருந்தார். இதுவே அவர் கொரோனாவை தோற்கடிக்க உதவியது” என்றார்.

Similar News