செய்திகள்
கோப்புப்படம்

இந்திய-சீன ராணுவ அதிகாரிகளுக்கு இடையே 9-வது சுற்று பேச்சுவார்த்தை

Published On 2021-01-25 00:41 GMT   |   Update On 2021-01-25 00:49 GMT
இந்திய-சீன ராணுவ அதிகாரிகளுக்கு இடையே 2½ மாத இடைவெளிக்கு பின் 9-வது சுற்று பேச்சுவார்த்தை நேற்று நடந்தது.
புதுடெல்லி:

கிழக்கு லடாக்கில் கடந்த ஆண்டு மே மாதம் நடந்த சீன ராணுவத்தின் அத்துமீறலும், ஜூன் மாதம் நிகழ்ந்த மோதலில் ஏற்பட்ட உயிரிழப்புகளும் உலக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தின. இந்த பிரச்சினை எல்லையில் நீறுபூத்த நெருப்பாகவே புகைந்து கொண்டிருக்கிறது.

லடாக்கில் சீனாவின் அச்சுறுத்தலை சமாளிப்பதற்காக சர்ச்சைக்குரிய பகுதிகள் முழுவதிலும் சுமார் 50 ஆயிரம் வீரர்களை களமிறக்கி இந்தியா கண்காணித்து வருகிறது. இதே எண்ணிக்கையிலான வீரர்களை சீனாவும் தனது பங்குக்கு நிறுத்தி இருக்கிறது. இதனால் லடாக்கில் ஏற்பட்ட பதற்றம் தணிய மறுக்கிறது.

இந்த பதற்ற சூழலை முடிவுக்கு கொண்டு வந்து, அங்கு அமைதியை நிலைநாட்டுவதற்கு இரு தரப்பும் ஆர்வம் காட்டி வருகின்றன. இதற்காக ராணுவம் மற்றும் தூதரக ரீதியாக தொடர் பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன.

அந்தவகையில் இரு நாட்டு ராணுவ கமாண்டர் மட்டத்தில் ஏற்கனவே 8 சுற்று பேச்சுவார்த்தைகள் நடந்தன. இதில் 8-வது சுற்று பேச்சுவார்த்தை கடந்த நவம்பர் 6-ந் தேதி நடந்தது. இதில் எல்லையில் பதற்றமான பகுதிகளில் இருந்து இரு தரப்பும் படைகளை வாபஸ் பெறுவது குறித்து விவாதிக்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக சுமார் 2½ மாதங்களுக்கு பிறகு நேற்று 9-வது சுற்று பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. கிழக்கு லடாக் எல்லையில் சீன பகுதிக்குள் அமைந்துள்ள மோல்டோ எல்லை பகுதியில் இந்த சந்திப்பு நடந்தது.

இந்திய தரப்பில் லே பிராந்திய 14-வது படைப்பிரிவு கமாண்டர் லெப்டினன்ட் ஜெனரல் பி.ஜி.கே.மேனன் தலைமையிலான குழுவினர் இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர். இந்த பேச்சுவார்த்தையிலும் சர்ச்சைக்குரிய பகுதிகளில் இருந்து படைகளை வாபஸ் பெறுவது குறித்தே விவாதிக்கப்பட்டது.

குறிப்பாக கிழக்கு லடாக்கில் சர்ச்சைக்குரிய மலைப்பிராந்திய பகுதிகளில் இருந்து படைகளை விலக்கி, பதற்றத்தை தணிக்க வேண்டும் என சீனாவிடம் இந்தியா சார்பில் வலியுறுத்தப்பட்டது. இந்த சந்திப்பில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து விரிவான தகவல் எதுவும் வெளியாகவில்லை.

முன்னதாக கடந்த அக்டோபர் 12-ந் தேதி நடந்த 7-வது சுற்று பேச்சுவார்த்தையில், பங்கோங் ஏரியின் தெற்கு கரை பகுதிகளில் இருந்து இந்தியா தனது படைகளை விலக்கிக்கொள்ள வேண்டும் என சீனா தரப்பில் வலியுறுத்தப்பட்டது. ஆனால் அனைத்து பகுதிகளில் இருந்தும் ஒரே நேரத்தில் இரு தரப்பும் படைகளை விலக்கிக்கொள்ள வேண்டும் என இந்தியா கூறியிருந்தது.

இவ்வாறு இரு நாடுகளும் ராணுவ மட்டத்திலான பேச்சுவார்த்தைகளை ஒருபுறம் நடத்தி வந்தாலும், மறுபுறம் தூதரக ரீதியிலான பேச்சுவார்த்தைகளும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அந்த வகையில் ஆலோசனை மற்றும் ஒருங்கிணைப்புக்கான செயல்பாட்டு நெறிமுறை கட்டமைப்பின் கீழ் கடந்த மாதம் இரு தரப்பும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டன. ஆனால் இதிலும் குறிப்பிடத்தக்க முடிவு எதுவும் எட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News