செய்திகள்
கோப்புப்படம்

மாநிலங்களவையில் ஒரே நாளில் 7 மசோதாக்கள் நிறைவேறின

Published On 2020-09-22 23:31 GMT   |   Update On 2020-09-22 23:31 GMT
நேற்று ஒரே நாளில் 7 மசோதாக்கள், மக்களவையை தொடர்ந்து மாநிலங்களவையிலும் நிறைவேறின.
புதுடெல்லி:

கடந்த 1955-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான மசோதா, கடந்த 15-ந் தேதி பாராளுமன்ற மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.

அந்த மசோதா, மாநிலங்களவையில் நேற்று எதிர்க்கட்சி உறுப்பினர்களின் புறக்கணிப்புக்கு இடையே, குரல் ஓட்டு மூலம் நிறைவேறியது. இதன்மூலம் இரு அவைகளின் ஒப்புதலை பெற்று விட்டது.

தானியங்கள், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துகள், சமையல் எண்ணெய், வெங்காயம், உருளைக்கிழங்கு போன்றவற்றை அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் இருந்து நீக்க இம்மசோதா வகை செய்கிறது. மேலும், பொருட்களை இருப்பு வைப்பதற்கு உச்சவரம்பு நிர்ணயிக்கும் முறையும் நீக்கப்படுகிறது. விவசாயிகளின் விளைபொருட்களை சேமித்து வைக்க சேமிப்பு கிடங்குகள், குளிர்பதன கிடங்குகள் ஆகியவை அமைக்கப்படும்.

மசோதா மீதான விவாதத்துக்கு பதில் அளித்து மத்திய நுகர்வோர் விவகாரத்துறை இணை மந்திரி தன்வே ராவ்சாகேப் தாதாராவ் கூறியதாவது:-

இருப்பு வைப்பதற்கான உச்சவரம்பு நிர்ணயிப்பதால், வேளாண் கட்டமைப்புகளில் முதலீடுக்கு இடையூறு ஏற்படுகிறது. அதனால், இனிமேல் தேசிய பேரழிவுகளின்போதும், அபரிமிதமான விலை உயர்வின்போதும் மட்டுமே இருப்பு வைப்பதற்கான உச்சவரம்பு நிர்ணயிக்கப்படும். இது, விவசாயிகள், நுகர்வோர் என இருதரப்புக்கும் நன்மை பயக்கும்.

விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும் அரசின் நடவடிக்கைகளுக்கு இது உதவும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த விவாதத்தில் பேசிய அ.தி.மு.க. உறுப்பினர் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன், “உணவுப்பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் அம்மா உணவகம், பொது வினியோக திட்டம் ஆகியவை இதற்கான உதாரணங்கள்” என்று கூறினார்.

ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டின் கீழ் கூட்டுறவு வங்கிகளை கொண்டு வரும் வங்கி ஒழுங்குமுறை திருத்த மசோதா, மக்களவையில் கடந்த 16-ந் தேதி நிறைவேறியது. நேற்று இந்த மசோதா, மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டது.

விவாதத்துக்கு பதில் அளித்து பேசிய மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், “முதலீட்டாளர்களின் நலன்களை பாதுகாக்கவே இம்மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது” என்று கூறினார்.

கம்பெனிகள் சட்ட திருத்த மசோதா, கடந்த 19-ந் தேதி மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. அந்த மசோதா, நேற்று மாநிலங்களவையிலும் நிறைவேறியது.

கம்பெனிகள் சட்டத்தின் 48 பிரிவுகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. பல்வேறு குற்றச்செயல்களை குற்றப்பட்டியலில் இருந்து விடுவிப்பதற்கும், சில குற்றங்களுக்கான அபராதத்தை குறைப்பதற்கும் இதில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்திய தகவல் தொழில்நுட்ப கல்வி நிறுவன சட்ட திருத்த மசோதா, மாநிலங்களவையில் நிறைவேறியது. சூரத், போபால், பாகல்பூர், அகர்தலா, ரெய்ச்சூர் ஆகிய ஊர்களில் தனியார்-பொது கூட்டில் அமைக்கப்பட்ட இந்திய தகவல் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களை (ஐ.ஐ.ஐ.டி.) தேசிய முக்கியத்துவம் வாய்ந்ததாக அறிவிக்க இம்மசோதா வழி வகுக்கிறது.

மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்ட வரிவிதிப்பு மற்றும் இதர சட்டங்கள் திருத்த மசோதா, மக்களவைக்கு திருப்பி அனுப்பப்பட்டது.

கொரோனா காலத்தில், ஜி.எஸ்.டி., வருமான வரி போன்ற வரி கணக்கு தாக்கல் செய்வதற்கு காலநீட்டிப்பு அளிக்க இம்மசோதாவில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. ‘பி.எம்.கேர்ஸ்’ நிதிக்கான நன்கொடைக்கு வரிவிலக்கு அளிக்கவும் இதில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

மேற்கண்ட 5 மசோதாக்களுடன், தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழக மசோதா, ராஷ்டிரீய ராகாஷ் பல்கலைக்கழக மசோதா ஆகியவையும் நிறைவேற்றப்பட்டன. 7 மசோதாக்களும் மொத்தம் 3½ மணி நேரத்தில் நிறைவேற்றப்பட்டன. எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பால், பா.ஜனதா, ஐக்கிய ஜனதாதளம், பிஜு ஜனதாதளம், அ.தி.மு.க., ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ், தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகளின் உறுப்பினர்கள் மட்டுமே பங்கேற்றனர்.

இடைநீக்கம் செய்யப்பட்ட உறுப்பினர்கள் வருத்தம் தெரிவித்தால், இடைநீக்கம் ரத்து செய்யப்படும் என்று சபைத்தலைவர் வெங்கையா நாயுடு கூறினார்.
Tags:    

Similar News