செய்திகள்
ஊரடங்கின்போது விழாக்களுக்கு அனுமதி தரக்கூடாது - மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுரை
கொரோனாவை கட்டுப்படுத்த விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கின்போது விழாக்களுக்கு அனுமதி அளிக்கக்கூடாது என அனைத்து மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுரை வழங்கியுள்ளது.
புதுடெல்லி:
கொரோனா வைரசைக் கட்டுப்படுத்தும் வகையில் இந்தியாவில் 21 நாட்கள் ஊடரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
ஆனாலும் கடந்த சில தினங்களாக கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இதற்கிடையே, கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் இந்த ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், கொரோனாவை கட்டுப்படுத்த விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கின்போது எந்த விழாக்களுக்கும் அனுமதி அளிக்கக்கூடாது என அனைத்து மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுரை வழங்கியுள்ளது.
இதுதொடர்பாக, உள்துறை அமைச்சகத்தின் இணை செயலாளர் புனியா சலிலா ஸ்ரீவத்சவா கூறியதாவது:
ஏப்ரல் மாதத்தில் பண்டிகைகள் வரும் நிலையில் எந்த திருவிழாக்களுக்கும் அனுமதி கூடாது. ஊரடங்கு அமல்படுத்தப்படுவதை மாநில அரசுகள் முழுமையாக உறுதி செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.