செய்திகள்
சூடான் தீவிபத்து - பலியானோர் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல்
சூடான் நாட்டில் ஏற்பட்ட தீவிபத்தில் பலியானவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:
சூடான் நாட்டில் செராமிக் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் நேற்று ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களில் 18 பேர் இந்தியர்கள் என வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். மேலும், தமிழகத்தை சேர்ந்த 3 பேர் காணாமல் போனதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், சூடான் நாட்டு தீவிபத்தில் சிக்கி பலியானோருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், சூடானில் ஒரு தொழிற்சாலையில் குண்டுவெடிப்பில், சில இந்திய தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர், சிலர் காயமடைந்துள்ளனர். இந்த செய்தியைக் கேட்டு நான் மிகவும் வேதனை அடைந்தேன்.
தங்கள் சொந்தங்களை இழந்து துயரமடைந்துள்ள குடும்பத்தினருக்காகவும், காயமடைந்தவர்களுக்காகவும் நான் பிரார்த்தனை செய்கிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் எங்கள் தூதரகம் வழங்கி வருகிறது என பதிவிட்டுள்ளார்.