செய்திகள்
கர்நாடக இடைத்தேர்தலில் தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களை தோற்கடிக்க வேண்டும் - தேவே கவுடா
தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களை தோற்கடிக்க வேண்டும் என ஜனதா தளம் கட்சி தலைவர் தேவே கவுடா தெரிவித்துள்ளார்.
பெங்களூரு:
கர்நாடகத்தில் மதசார்பற்ற ஜனதாதளம் - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்தபோது அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 17 பேர் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.
17 பேரின் ராஜினாமா கடிதங்களை அப்போதைய சபாநாயகர் ரமேஷ்குமார் ஏற்கவில்லை. 17 எம்.எல்.ஏ.க்களையும் தகுதிநீக்கம் செய்து உத்தரவிட்டார்.
இதன் காரணமாக மதசார்பற்ற ஜனதாதளம் - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது. தகுதி நீக்கம் செய்யப்பட்ட 17பேரும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதிகள் தங்களது உத்தரவில் 17 பேரின் தகுதிநீக்கம் செல்லும் என்றும், அவர்கள் இடைத்தேர்தலில் போட்டியிட தடை இல்லை என்றும் அறிவித்தனர்.
தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களின் 17 தொகுதிகளில் 15 தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் நாளை (5-ம் தி) நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி நாளை தேர்தல் நடக்கிறது. இந்த 15 தொகுதிகளிலும் 165 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்.
இதில், தகுதி நீக்கம் செய்யப்பட்ட அதிருப்தி எம்.எல்.ஏ.க்களில் 13 பேருக்கு பா.ஜ.க. சார்பில் போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், கர்நாடகா இடைத்தேர்தலில் போட்டியிடும் தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களை தோற்கடிக்க வேண்டும் என ஜனதா தளம் கட்சி தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவே கவுடா கோரிக்கை விடுத்துள்ளார்.