செய்திகள்
கேபி ஷனப்பா

களைகட்டும் கலபுரகி தொகுதி- உமேஷ் ஜாதவ் வரவால் பாஜகவில் இருந்து வெளியேறிய மூத்த தலைவர்

Published On 2019-03-16 08:12 GMT   |   Update On 2019-03-16 08:12 GMT
பாராளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், கர்நாடக மாநிலம் கலபுரகி தொகுதியைச் சேர்ந்த பாஜக மூத்த தலைவர் ஒருவர் கட்சியில் இருந்து விலகியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #ParliamentElection #KarnatakaBJP #BJPLeaderShanappa
கலபுரகி:

கர்நாடக முதல்வர் குமாரசாமி தலைமையிலான அமைச்சரவையில் இடம் கிடைக்காததால், காங்கிரசை சேர்ந்த சில எம்எல்ஏக்கள் அதிருப்தியில் இருந்தனர். அத்துடன் காங்கிரஸ் - ஜேடிஎஸ் கூட்டணி அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர். அவர்கள் பாஜகவில் இணையப் போவதாகவும் எச்சரிக்கை விடுத்தனர். பின்னர் அவர்களை கட்சி தலைமை சமாதானப்படுத்தி ஆட்சியை தக்க வைத்தது.

எடியூரப்பாவுடன் உமேஷ் ஜாதவ்

எனினும், சின்சோலி தொகுதி எம்எல்ஏ உமேஷ் ஜாதவ் திடீரென‌ தனது பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் காங்கிரசில் இருந்து விலகிய அவர், கலபுரகியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாஜகவில் இணைந்தார். அப்போதே அவர் கலபுரகி மக்களவைத் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படலாம் என தகவல் வெளியானது.

தற்போது வேட்பாளர் தேர்வு நடைபெற்ற வரும் நிலையில், கலபுரகி தொகுதியில் போட்டியிட உமேஷ் ஜாதவுக்கு வாய்ப்பு வழங்க பாஜக முடிவு செய்திருப்பதாக தெரியவந்துள்ளது.

இதனால் கடும் அதிருப்தி அடைந்த பாஜக மூத்த தலைவரும் முன்னாள் சட்ட மேலவை உறுப்பினருமான கே.பி.ஷனப்பா கட்சியில் இருந்து வெளியேற உள்ளதாக இன்று அறிவித்தார். இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசிய அவர், உள்ளூர் தலைவர்களை புறக்கணித்துவிட்டு, வெளியில் இருந்து வந்தவர்களுக்கு முன்னுரிமை கொடுப்பதால் கட்சியில் இருந்து விலகுவதாக கூறினார்.

மேலும், விரைவில் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து காங்கிரஸ் வேட்பாளர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய உள்ளதாகவும் கூறினார்.

இவ்வாறு மாறி மாறி முக்கிய தலைவர்கள் மற்றும் ஆதரவாளர்கள் கட்சி தாவி வருவதால் கலபுரகி தொகுதி பரபரப்பாக காணப்படுகிறது. #ParliamentElection #KarnatakaBJP #BJPLeaderShanappa

Tags:    

Similar News