செய்திகள்

காஷ்மீரில் கூடுதலாக படைகள் குவிப்பு ஏன்? - கவர்னர் புதிய தகவல்

Published On 2019-02-24 16:33 IST   |   Update On 2019-02-24 16:33:00 IST
ஜம்மு-காஷ்மீரில் கூடுதலாக துணை ராணுவப் படைகள் அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் பரவிவரும் சில வதந்திகள் தொடர்பாக அம்மாநில கவர்னர் சத்ய பால் மாலிக் இன்று விளக்கம் அளித்துள்ளார். #KashmirGovernor #Additionalforces
ஜம்மு:

காஷ்மீர் மாநிலத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் பிரிவினைவாத இயக்கங்களின் தலைவர்களான யாசின் மாலிக், அப்துல் ஹமித் பயாஸ் உள்ளிட்டவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். சிலர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.

இந்த அதிரடி கைது நடவடிக்கைக்கு அங்குள்ள மற்ற பிரிவினைவாத இயக்கங்கள் கண்டனம் தெரிவித்துள்ளன. இதுபோன்ற நடவடிக்கைகள் காஷ்மீரில் பதற்றத்தை இன்னும் அதிகரிக்க வைக்கும் என அந்த இயக்கங்களை சேர்ந்த பிரமுகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த கருத்தை ஆமோதிக்கும் வகையில் இன்று பேட்டியளித்த காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரி மெஹ்பூபா முப்தி மத்திய அரசின் இந்த நடவடிக்கை நிலைமையை மேலும் தீவிரமாக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில், அரசியலமைப்பு சட்டம்  35A-வின்கீழ் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படுவது தொடர்பாக சுப்ரீம் கோர்ட் நாளை விசாரணை நடத்துகிறது.

இந்நிலையில், காஷ்மீரில் வன்முறை சம்பவங்கள் ஏற்படாமல் தடுக்கவும் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கவும் கூடுதலாக துணை ராணுவப்படையினரை அனுப்பி வைக்குமாறு மாநில அரசின் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது.



இதைதொடர்ந்து, மத்திய ரிசர்வ் படையை சேர்ந்த 45 கம்பெனி வீரர்கள், எல்லைப் பாதுகாப்பு படையை சேர்ந்த 35 கம்பெனி வீரர்கள், ஷாஸ்திர சீமா பல் படையை சேர்ந்த 10 கம்பெனி வீரர்கள், இந்தோ-திபெத்திய எல்லை போலீஸ் படையை சேர்ந்த 10 கம்பெனி வீரர்கள் என 100 கம்பெனி வீரர்கள் (ஒரு கம்பெனி வீரர்கள் என்பது சுமார் 50 வீரர்கள் கொண்ட குழுவாகும்) காஷ்மீர் மாநிலத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த படையினர் பதற்றம் நிறைந்த பகுதிகளில் பணியமர்த்தப்பட்டு சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கும் கண்காணிப்பு மற்றும் வன்முறையாளர்கள் மீது நடவடிக்கை எடுப்பது போன்ற பணிகளில் ஈடுபடுத்தப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த படைப்பிரிவின் பெரும் பகுதியினர் இங்கு வந்து சேர்ந்துள்ள நிலையில் ஜம்மு-காஷ்மீர் மாநிலம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படவுள்ளதாகவும், ஆயுதப்படை சிறப்பு சட்டத்தை பயன்படுத்தி பிரிவினைவாத இயக்கங்களின் முக்கிய தலைவர்களை என்கவுன்ட்டரில் சுட்டுக்கொல்ல ரகசிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் நேற்றிலிருந்து சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.

இந்நிலையில், ஜம்முவில் உள்ள ராஜ்பவனில் அம்மாநில கவர்னர் சத்ய பால் மாலிக் இன்று உள்துறை மற்றும் காவல்துறை உயரதிகாரிகளுடன் சட்டம்-ஒழுங்கு நிலவரம் தொடர்பாக ஆலோசனை நடத்தினார். பின்னர், செய்தியாளர்களுக்க்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது:-

சமீபத்தில் நடந்து முடிந்த பஞ்சாயத்து மற்றும் உள்ளாட்சி தேர்தல்களின்போது கூடுதலாக 400 கம்பனி துணை ராணுவப் படைகள் இங்கு வந்ததால்தான் எவ்வித அசம்பாவிதமும் ஏற்படாமல் 13 கட்டங்களாக தேர்தல்களை நடத்த முடிந்தது.

இப்போது 100 கம்பெனி படைகள் மட்டுமே அனுப்பப்பட்டுள்ளன. இன்னும் சில நாட்களில் மேலும் பல கம்பெனி படைகள் இங்கு வரவுள்ளன. எனவே, வதந்திகளை கண்டு மக்கள் பீதியடைய வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.

எங்களது சண்டை காஷ்மீருக்கானது, காஷ்மீர் மக்களுக்கு எதிரானது அல்ல என சமீபத்தில் பிரதமர் மோடி கூறியுள்ளதை இங்குள்ள மக்கள் கவனிக்க வேண்டும். காஷ்மீர் மக்கள் இந்தியாவின் தவிர்க்க முடியாதவர்கள் மட்டுமல்ல, அவர்கள் நாட்டின் எந்த மூலையில் இருந்தாலும் பாதுகாப்பு அளிக்க வேண்டியது இந்தியாவின் பொறுப்பாகும் என்பதையும் அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். #KashmirGovernor #Additionalforces
Tags:    

Similar News