செய்திகள்

மகாராஷ்டிராவில் அரசு ஆஸ்பத்திரிகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு பரிசு பெட்டக திட்டம் துவக்கம்

Published On 2019-01-30 02:50 GMT   |   Update On 2019-01-30 02:50 GMT
மராட்டியத்தில் அரசு ஆஸ்பத்திரிகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு பரிசு பெட்டகம் வழங்கும் திட்டத்தை மந்திரி பங்கஜா முண்டே தொடங்கி வைத்தார். #PankajaMunde
மும்பை :

மராட்டியத்தில் குழந்தைகள் இறப்பு விகிதத்தை குறைக்கும் வகையில் அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிறக்கும் குழந்தைகளுக்கு பரிசு பெட்டகம் வழங்க மாநில அரசு முடிவு செய்தது.

இந்த திட்டத்தை நேற்று பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை மந்திரி பங்கஜா முண்டே தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

அரசு மருத்துவமனைகளில் முதல் குழந்தையை பெற்றெடுக்கும் பெண்களுக்கு இந்த குழந்தைகள் நல பரிசு பெட்டகம் வழங்கப்படும். இந்த திட்டத்திற்காக அரசு ரூ.20 கோடி ஒதுக்கியுள்ளது. ஆனால் மேலும் நிதி தேவைப்படும் பட்சத்தில் அதிகமாக ஒதுக்கீடு செய்யப்படும்.

மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஆண்டுதோறும் கிட்டத்தட்ட 10 லட்சம் பிரசவங்கள் நடக்கின்றன. இதில் 4 லட்சம் பெண்களுக்கு இது முதல் பிரசவமாகும். இந்த 4 லட்சம் பேருக்கும் குழந்தைகள் நல பரிசு பெட்டகம் கிடைக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த பரிசு பெட்டகத்தில் குழந்தைகளின் உடைகள், பிளாஸ்டிக் டைபர், மெத்தை, துண்டு, தெர்மோமீட்டர், மசாஜ் எண்ணெய், கொசு வலை, போர்வை, பிளாஸ்டிக் தரைவிரிப்பு, சாம்பு, பொம்மை, நகவெட்டி மற்றும் சாக்ஸ் ஆகியவை அடங்கியிருக்கும்.

இந்த பரிசு பெட்டகம் ஒன்றின் மதிப்பு ரூ.2 ஆயிரம் ஆகும்.

ஏற்கனவே தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் இந்த திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. #PankajaMunde
Tags:    

Similar News