செய்திகள்

ஜார்க்கண்ட் மாநிலத்தில் சிறப்பு படையினருடன் துப்பாக்கிச் சண்டை - 5 நக்சலைட்கள் கொல்லப்பட்டனர்

Published On 2019-01-29 09:58 GMT   |   Update On 2019-01-29 09:58 GMT
ஜார்க்கண்ட் மாநிலத்தில் இன்று சிறப்பு படையினருடன் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் ஐந்து நக்சலைட்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். #Jharkhandnaxaldead
ராஞ்சி:

மேலாதிக்கவாதிகளின் அடக்குமுறைகளால் பாதிக்கப்படும் கீழ்த்தட்டு மக்களில் சிலர், இரு வர்க்கத்துக்கும் இடையிலான இடைவெளியை குறைப்பதற்கு ஆயுத வன்முறையே சிறந்த தீர்வென கருதுகின்றனர்.

பல்லாண்டு காலமாக அரசிடம் போராடி பெறமுடியாத சில சலுகைகளையும் ஆயுதப் புரட்சியின்மூலம் அடைந்துவிட முடியும் என கருதும் இவர்கள் ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், ஒடிசா, ஆந்திரா, மணிப்பூர் உள்ளிட்ட சில மாநிலங்களில் நக்சலைட்களாகவும், மாவோயிஸ்ட்களாகவும், நாடெங்கிலும் உள்ள காடு, மலைகளில் பதுங்கி வாழ்ந்து வருகின்றனர்.

இவர்களை வேட்டையாட சிறப்பு தனிப்படை பிரிவினர் தொடர்ந்து தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த படையினருக்கு துணையாக மத்திய ரிசர்வ் போலீஸ் படையினரும் உடன் செல்வதுண்டு.

இந்நிலையில், ஜார்க்கண்ட் மாநிலத்தில் குந்தி மற்றும் மேற்கு சிங்பம் மாவட்ட எல்லையில் இன்று காலை 6.20 மணி அளவில் நடைபெற்ற தேடுதல் வேட்டையில் உள்ளூர் நக்சலைட் இயக்கத்தை சேர்ந்த ஐந்து நக்சலைட்களை சிறப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். ஒருவர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர்களிடமிருந்து ஏகே47 மற்றும் ஏ303 ரக துப்பாக்கிகள், 5 பிஸ்டல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. #Jharkhandnaxaldead
Tags:    

Similar News