செய்திகள்

சித்தகங்கா மடாதிபதி சிவகுமார சுவாமி உடல் இன்று மாலை நல்லடக்கம்- கர்நாடகாவில் அரசு விடுமுறை

Published On 2019-01-22 07:06 GMT   |   Update On 2019-01-22 07:06 GMT
கர்நாடக மாநிலம் சித்தகங்கா மடத்தின் ஜீயர் ஸ்ரீ சிவகுமார சுவாமிஜி உடல் இன்று நல்லடக்கம் செய்யப்பட உள்ள நிலையில், கர்நாடக மாநிலத்தில் இன்று பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. #ShreeShivakumaraSwamiji #Yeddyurappa
பெங்களூரு:

கர்நாடக மாநிலம், துமக்கூரு மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சித்தகங்கா மடத்தின் ஜீயராக பொறுப்பு வகித்து வந்தவர் சிவகுமார சுவாமி. இவர் கடந்த 1941-ம் ஆண்டில் இருந்து துமக்கூரு சித்தகங்கா மடத்தின் முக்கிய பொறுப்புகளை வகித்து வந்துள்ளார். இந்நிலையில், வயோதிகம் சார்ந்த பிரச்சனைகளால் அவரது உடல்நிலையில் திடீரென்று பின்னடைவு ஏற்பட்டது. இதனால் ஸ்ரீ சிவகுமார சுவாமிஜி நேற்று காலை 11.40 மணியளவில் தனது 111-வது வயதில் காலமானார்.



இதனையடுத்து அவரது உடல் சித்தகங்கா மடத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. கர்நாடக முதல் மந்திரி குமாரசாமி, முன்னாள் முதல் மந்திரி சதானந்தா கவுடா, மாநில பாஜக தலைவர் எடியூரப்பா என பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

ஜீயர் சிவகுமார சுவாமி மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், மூன்று நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று மாலை நடைபெறவிருக்கும் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக மத்திய மந்திரிகள் மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் அரசியல் தலைவர்கள், பக்தர்கள், சீடர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் வந்த வண்ணம் உள்ளனர்.

இன்று மாலை 4.30 மணியளவில் சித்தகங்கா மடத்தில் ஸ்ரீ சிவகுமார சுவாமிஜியின் உடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. #ShreeShivakumaraSwamiji #Siddagangaseer #Yeddyurappa
  
Tags:    

Similar News