செய்திகள்

சபரிமலை விவகாரம் - கேரள சட்டசபையில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கடும் அமளி

Published On 2018-11-28 06:12 GMT   |   Update On 2018-11-28 06:12 GMT
சபரிமலையில் கேரள அரசு 144 தடை உத்தரவு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதைக் கண்டித்து கேரள சட்டசபையில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர். #KeralaAssemblySession #SabarimalaTempleIssue
திருவனந்தபுரம்:

சபரிமலை ஐயப்பன் கோவில் தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்பு கேரளாவில் தொடர் போராட்டங்களுக்கு வழிவகுத்தது. சபரிமலை நடை திறந்தபோது இந்து அமைப்புகள் தீவிரபோராட்டம் நடத்தியதால் பதற்றமான சூழல் நிலவியது. அதன்பின்னர் சபரிமலையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த பரபரப்பான சூழ்நிலையில், கேரள சட்டமன்ற கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத் தொடரில் சபரிமலை விவகாரம் எதிரொலித்தது.

இந்நிலையில்  சட்டசபை இன்று காலை வழக்கம்போல் கூடியது. அப்போது சபரிமலை விவகாரத்தில் அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் மற்றும் கட்டுப்பாடுகளை கண்டித்து காங்கிரஸ் எம்எல்ஏக்கள் முழக்கம் எழுப்பினர். எதிர்ப்பு வாசகங்கள் அடங்கிய பேனர்களையும் ஏந்தியிருந்தனர்.



வெள்ள பாதிப்பு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சீரமைப்பு பணிகள் குறித்து முதல்வர் பினராயி விஜயன் பேசினார். அவரை பேச விடாமல் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் முழக்கமிட்டு இடையூறு செய்தனர். அவர்களை இருக்கைகளில் அமரும்படி சபாநாயகர் கூறினார். ஆனாலும் உறுப்பினர்கள் தொடர்ந்து அரசுக்கு எதிராக கோஷமிட்டனர். ஒரு கட்டத்தில் அவையின் மையப்பகுதிக்கே வந்து முழக்கங்கள் எழுப்பினர். இதனால் சபையில் கூச்சல் குழப்பம் நிலவியது.

பாஜக எம்எல்ஏ ராஜகோபால், ஐயப்ப பக்தர்கள் அணியும் கருப்பு உடை அணிந்து சபைக்கு வந்திருந்தார். இதேபோல் காங்கிரஸ் எம்எல்ஏ பிசி ஜார்ஜும், கருப்பு உடை அணிந்து வந்திருந்தார். #KeralaAssemblySession #KeralaCongressMLAsProtest  #SabarimalaTempleIssue
Tags:    

Similar News