செய்திகள்
பாலக்காட்டில் 2½ கிலோ தங்க கட்டிகள் கடத்தியவர் கைது
பாலக்காட்டில் 2½ கிலோ தங்க கட்டிகள் கடத்தியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொழிஞ்சாம்பாறை:
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் ஒற்றப்பாலம் ரெயில்வே போலீசார், போதைப்பொருள் தடுப்பு போலீசார் இணைந்து ஒற்றப்பாலம் ரெயில் நிலையத்தில் திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது ஒருவர் சந்தேகப்படும்படி பிளாட்பாரத்தில் நின்றிருந்தார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசினார்.
இதனையடுத்து அவர் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது 2½ கிலோ தங்க கட்டிகள் இருந்தன. இது குறித்து ரெயில்வே சர்க்கிள் இன்ஸ்பெக்டர் அப்துல் முனீர் விசாரணை நடத்தினார். கடத்தப்பட்ட தங்க கட்டிகளுக்கு முறையான ஆவணங்கள் இல்லை.
விசாரணையில் தங்க கட்டிகளை கடத்தி வந்தவர் திருச்சூரை சேர்ந்த லூயிஸ் (வயது 46) என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து தங்க கட்டிகளை மீட்டனர். இது குறித்து வருமானவரிதுறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.