செய்திகள்

நான் செத்தால் சி.பி.ஐ. பொறுப்பேற்குமா? - நீதிமன்றத்தில் இந்திராணி முகர்ஜி வாதம்

Published On 2018-10-16 13:05 GMT   |   Update On 2018-10-16 13:05 GMT
மருத்துவ சிகிச்சைக்காக ஜாமின் கேட்டு விண்ணப்பித்துள்ள இந்திராணி முகர்ஜி இன்று நீதிமன்றத்தில் வாதாடுகையில் நான் செத்தால் சி.பி.ஐ. பொறுப்பேற்குமா? என கேள்வி எழுப்பினார். #IndraniMukerjea #SheenaBoraCase
மும்பை:

பிரபல தனியார் தொலைக்காட்சியில் தலைமை பொறுப்பை வகித்த பீட்டர் முகர்ஜியின் மனைவியான இந்திராணி(43) தனது மகள் ஷீனா போராவை கொலை செய்ததாக கடந்த 2016-ல் ஆண்டில் கைது செய்யப்பட்டார். மும்பையில் நடந்த இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

இந்திராணி ஏற்கனவே நடந்த இரு திருமணங்கள் மற்றும் முன்னாள் கணவர்கள் மூலம் பிறந்த 3 பிள்ளைகள் பற்றிய விவரத்தையும் மறைத்து பீட்டர் முகர்ஜியை மூன்றாவதாக மணந்ததாக கூறப்படுகிறது.

பீட்டர் முகர்ஜிக்கு அவருடைய முன்னாள் மனைவி மூலம் பிறந்த மகன் ராகுலை ஷீனா போரா முறைதவறி காதலித்ததால் இந்த கொலை நடந்ததாக கூறப்படுகிறது. இதற்கு இந்திராணியின் இரண்டாவது கணவர் சஞ்சீவ் கன்னா, கார் டிரைவர் ஷாம் ராய் ஆகியோர் உடந்தையாக இருந்துள்ளனர். 

இந்த கொலை வழக்கில் இந்திராணி, சஞ்சீவ் கன்னா, கார் டிரைவர் ஷாம் ராய் ஆகிய 3 பேரையும் மும்பை போலீசார் கைது செய்தனர். அவர்கள் மூவரும் மும்பையில் உள்ள ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர்.

ஷீனா போரா கொலை வழக்கில் இந்திராணி முகர்ஜி, அவரது கணவர் பீட்டர் முகர்ஜி மற்றும் முன்னாள் கணவர் சஞ்சீவ் கண்ணா ஆகியோர் மீது கடந்த ஆண்டு ஜனவரி மாதம் மும்பை சி.பி.ஐ., நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இதற்கிடையில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்திராணி முகர்ஜி சார்பில் பலமுறை தாக்கல் செய்யப்பட்ட ஜாமின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

இந்நிலையில்,  மும்பையில் உள்ள பைக்குலா ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள இந்திராணிக்கு குறைந்த ரத்த அழுத்தம் மற்றும் முதுகுத்தண்டு வடம் வழியாக மூளை பகுதிக்கு ரத்தம் பாய்ச்சும் நரம்புகளில் அடைப்பு ஆகியவற்றுக்காக சிகிச்சை அளிப்பதற்காக மும்பை ஜே.ஜே. மருத்துவமனையில் அனுமதிக்குமாறு சிறை மருத்துவர்கள் பரிந்துரைத்தனர்.

இதைதொடர்ந்து, கடந்த மாதம் அவர்  ஜே.ஜே. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர்.

மேல்சிகிச்சை பெறுவதற்காக தன்னை ஜாமினில் விடுவிக்க வேண்டும் என மும்பையில் உள்ள சி.பி.ஐ. நீதிமன்றத்தில் இந்திராணி முகர்ஜி மீண்டும் மனு தாக்கல் செய்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது அவரை ஜாமினில் விடுவிக்க சி.பி.ஐ. தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.



இதனால் ஆவேசம் அடைந்த இந்திராணி முகர்ஜி தானே வழக்கறிஞராக மாறி எதிர்வாதம் செய்தார்.

உடல்நலக்குறைவால் நான் செத்தால் சி.பி.ஐ. பொறுப்பேற்குமா? என எதிர்தரப்பு வக்கீலிடம் அவர் கேள்வி எழுப்பினார். இதனால் நீதிமன்றத்தில் சற்றுநேரம் சலசலப்பு ஏற்பட்டது.

எனினும், மருத்துவ காரணங்களுக்காக இந்திராணி முகர்ஜியை ஜானினில் விடுவிக்க நீதிபதி மறுத்து விட்டார். #IndraniMukerjea #SheenaBoraCase
Tags:    

Similar News