செய்திகள்

விநாயகரை வாழ்த்தி கோ‌ஷமிட்ட முஸ்லிம் எம்.எல்.ஏ. - கட்சி வற்புறுத்தலால் மன்னிப்பு கேட்டார்

Published On 2018-09-26 08:02 GMT   |   Update On 2018-09-26 08:02 GMT
விநாயகர் சதுர்த்தியன்று கணபதியை போற்றி கோஷமிட்டதை கட்சி கண்டித்ததை அடுத்து முஸ்லிம் எம்.எல்.ஏ. மன்னிப்பு கேட்டார். #vinayagarchaturthi #WarisPathan
மும்பை:

அகில இந்திய மஜ்லீஸ்-இ -இத்தேகாதுல் முஸ்லிமீன் (ஏ.ஐ.எம்.ஐ.எம்.) கட்சி எம்.எல்.ஏ. வாரிஸ் பதான். இவர் மும்பையில் பைகுலா சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ. ஆவார்.

சமீபத்தில் அங்கு நடந்த விநாயகர் சதுர்த்தி விழாவில் கலந்து கொண்டு சாமி கும்பிட்டார்.

பின்னர் அங்கு கூடியிருந்த பக்தர்கள் மத்தியில் பேசினார். அப்போது “விநாயகரை வணங்குவதன் மூலம் அவர் நம் அனைவருக்கும் மகிழ்ச்சி அளிப்பார். எத்தனை தடைகள் வந்தாலும் அதை தகர்த்தெறிந்து மேன்மைபடுத்துவர் என புகழாரம் சூட்டினார்.

மேலும் அவர் பேசும் போது, “இன்று நாம் அனைவரும் ஒன்று கூடியிருக்கிறோம். கடவுள் விநாயகர் அனைவரது கஷ்டங்கள் மற்றும் பிரச்சினைகளை தீர்த்து மகிழ்ச்சி பெற செய்ய வேண்டும் என பிரார்த்திக்கிறேன். கண்பதி பப்பா மோரியா என்ற வாழ்த்து கோ‌ஷத்துடன் பேசி முடித்தார்.


இதற்கு ‘ஏ.ஐ.எம்.ஐ.எம்.’ கட்சியை சேர்ந்த அசாதுதீன் ஓவாஸ்சிஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். எம்.எல்.ஏ. வாரிஸ் பதானின் இத்தகைய செயல் கட்சிக்கு அவமானத்தை ஏற்படுத்தி உள்ளது என்றார். சில முஸ்லிம் மத குருக்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து ‘கண்பதி பப்பா மோரியா’ என்ன வாழ்த்து கோ‌ஷமிட்ட எம்.எல்.ஏ. பதான் அதற்காக சமூக வலைதளங்களில் மன்னிப்பு கேட்டார். “எனது இந்த தவறுக்காக அல்லா என்னை மன்னிப்பார் என நம்புகிறேன்” என தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே சிவசேனா கட்சி தலைவர்களில் ஒருவரான அரவிந்த் சவாந்த் இவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். கடவுள் விநாயகரை முஸ்லிம் அரசியல்வாதி வாழ்த்தியதில் தவறு இல்லை. ‘கண்பதி பப்பா மோரியா’ என கூறியதை குற்றமாக கருதக்கூடாது” என தெரிவித்துள்ளார். #vinayagarchaturthi #WarisPathan
Tags:    

Similar News