செய்திகள்
ஜவஹர்லால் நேரு பல்கலை. மாணவர் சங்க தேர்தலில் ஐக்கிய இடதுசாரி வேட்பாளர்கள் வெற்றி
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்க தேர்தலில் ஐக்கிய இடதுசாரி கூட்டணி வேட்பாளர்கள் வெற்றிபெற்று முக்கிய பொறுப்புக்களை கைப்பற்றியுள்ளனர். #JNUSUElection2018
புதுடெல்லி:
தேசிய தலைநகர் டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் மாணவர் சங்க தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை கடந்த 14-ம் தேதி காலை துவங்கியது. இந்த தேர்தலில் போட்டியிட்ட அகில பாரதிய வித்யா பரிஷத் (ஏ.பி.வி.பி.) என்ற மாணவர் சங்கத்துக்கு வாக்கு எண்ணிக்கை குறித்து தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது.
இதையடுத்து, வாக்கு எண்ணிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஏ.பி.வி.பி. சங்க மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். வாக்கு எண்ணிக்கையின்போது, எதிர்ப்பாராதவிதமாக வாக்கு எண்ணும் அறைக்குள் நுழைந்த ஏ.பி.வி.பி. சங்க மாணவர்கள் வாக்குப்பெட்டிகளை உடைக்க முற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நடந்த மாணவர் சங்க தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக பல்கலைக்கழக தேர்தல் நிர்வாகம் அறிவித்தது.
பின்னர், நேற்றிரவு மீண்டும் தொடங்கிய வாக்கு எண்ணிக்கையில் இன்று பிற்பகல் வெளியான முடிவு நிலவரங்களின்படி, ஐக்கிய இடதுசாரி கூட்டணியை சேர்ந்த சாய் பாலாஜி தலைவராகவும் , சரிகா சவுத்ரி துணை தலைவராகவும், ஐஜாஸ் அஹமத் ராத்தெர் பொதுச் செயலாளராகவும், அமுதா ஜெயதீப் துணை பொதுச் செயலாளராகவும் தேர்வாகியுள்ளனர்.
அனைத்திந்திய மாணவர் சங்கம், இந்திய மாணவர்கள் கூட்டமைப்பு, அனைத்திந்திய மாணவர்கள் கூட்டமைப்பு, டெல்லி மாணவர்கள் கூட்டமைப்பு ஆகிய சங்கங்கள் இந்த ஐக்கிய இடதுசாரி கூட்டணியில் இடம்பெற்றுள்ளன.
#JNUSUElection2018