தபால் நிலையங்களில் வங்கி சேவை- பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார்
புதுடெல்லி:
இந்தியா முழுவதும் கிராமப்புற மக்களுக்கும் வங்கி சேவைகள் எளிதாகவும், நேரடியாகவும் கிடைக்க ஏதுவாக அஞ்சல் நிலையங்களை வங்கி சேவைகள் அளிக்கும் மையங்களாக மாற்றும் திட்டத்தை பிரதமர் மோடி டெல்லியில் இன்று தொடங்கி வைத்தார்.
நாடு முழுவதும் அனைத்து பகுதிகளிலும் இன்று குறிப்பிட்ட தபால் அலுவலகங்களில் இந்த சேவை இன்று தொடங்கப்பட்டது. வருகிற டிசம்பர் மாதத்துக்குள் நாடு முழுவதும் உள்ள 1 லட்சத்து 30 ஆயிரம் தபால் அலுவலகங்களில் இந்த சேவை தொடங்கப்பட உள்ளது.
தமிழகத்தில் இன்று 185 தபால் நிலையங்களில் வங்கி சேவை இன்று முதல் தொடங்கி உள்ளது.
சென்னையில் அண்ணா சாலை தலைமை தபால் நிலையம், அம்பத்தூர் தலைமை தபால் நிலையம், செங்குன்றம், அலமாதி, பூஞ்சேரிப்பட்டு ஆகிய இடங்களில் தொடங்கப்பட்டுள்ளது. சென்னையில் மொத்தம் உள்ள 304 தபால் நிலையங்களிலும் டிசம்பர் 31-ந்தேதிக்குள் இந்த சேவை அறிமுகம்மாகும்.
தபால் நிலையங்களில் வாடிக்கையாளர்கள் தொடங்கும் சேமிப்பு கணக்குக்கு பாஸ்புத்தகம், ஏ.டி.எம். கார்டு, செக்புக் எதுவும் வழங்கப்படமாட்டாது.
‘கியுஆர்’ கார்டு வழங்கப்படும். அதில் கணக்கு, வாடிக்கையாளர்கள் விவரம் அனைத்தும் இடம் பெற்று இருக்கும்.
வீடுதேடி வரும் இந்த வங்கி சேவை கிராமப்புற மக்களுக்கு வரப்பிரசாதமாக அமையும். #IndiaPostPayments #PMModi