செய்திகள்
ரெயில்வே டெண்டர் முறைகேடு வழக்கு - லாலு, ராப்ரி தேவி உள்பட 13 பேர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்
ரெயில்வே உணவு டெண்டர் முறைகேடு விவகாரத்தில் லாலு பிரசாத் யாதவ் மற்றும் அவரது மனைவி ராப்ரி தேவி உள்ளிட்ட 13 பேர் மீது அமலாக்கத்துறை இன்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. #RailwayTenderScam #LaluPrasad
புதுடெல்லி:
ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் தலைவரும், பீகார் முன்னாள் முதல் மந்திரியுமான லாலு பிரசாத் யாதவ், மாட்டுத்தீவன ஊழல் வழக்குகளில் சிறைத்தண்டனை பெற்று வருகிறார். கடந்த பிப்ரவரி மாதம் சிறையிலடைக்கப்பட்ட அவர், உடல்நலக் குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
அதன்பின், அங்கிருந்து சிகிச்சைக்காக ராஞ்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் அவரது ஜாமீன் மனு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வந்தது.
இதற்கிடையே, தனது ஜாமீனை நீட்டிக்கக் கோரி லாலு மனுதாக்கல் செய்தார். அவரது மனுவை நிராகரித்த ராஞ்சி ஐகோர்ட், ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் கோர்ட்டில் சரணடைய வேண்டும் என உத்தரவிட்டது.
இந்நிலையில், ரெயில்வே உணவு டெண்டர் முறைகேடு விவகாரம் தொடர்பாக, லாலு பிரசாத் யாதவ், அவரது மனைவி ராப்ரி தேவி, மகன் தேஜஸ்வி யாதவ் உள்பட 13 பேர் மீது அமலாக்கத்துறை இன்று குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்துள்ளது.
லாலு பிரசாத் யாதவ் ரெயில்வே மந்திரியாக இருந்தபோது, ரெயில்வே உணவு டெண்டரில் ரூ.44.75 கோடி அளவுக்கு முறைகேடு நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. #RailwayTenderScam #LaluPrasad