செய்திகள்

குருதாஸ் காமத் மறைவு - ராகுல், ராஜ்நாத் சிங் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்

Published On 2018-08-22 08:25 GMT   |   Update On 2018-08-22 08:25 GMT
முன்னாள் மந்திரி குருதாஸ் காமத் மறைவுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். #GurudasKamat #RIPGurudasKamat
புதுடெல்லி:

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய மந்திரியுமான குருதாஸ் காமத் (வயது 63), டெல்லியில் உள்ள அலுவலகத்தில் இருந்தபோது இன்று காலை அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. உடனே அவரது கார் டிரைவர் அவரை சாணக்யபுரியில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். ஆனால் வழியிலேயே அவர் உயிர் பிரிந்துவிட்டது.  அவரது மறைவு குறித்து தகவல் அறிந்த குடும்பத்தினர் மும்பையில் இருந்து டெல்லிக்கு விரைந்தனர்.



குருதாஸ் காமத் மறைவு குறித்து கேள்விப்பட்டதும் சோனியா காந்தி உடனடியாக மருத்துவமனைக்குச் சென்று அவரது உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மன்மோகன் சிங், பிரணாப் முகர்ஜி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

‘குருதாஸ் காமத் மறைவு காங்கிரஸ் குடும்பத்திற்கு விழுந்த பெரிய அடி ஆகும். மும்பையில் காங்கிரசை கட்டமைக்க உதவிய அவர், அனைவராலும் மதிக்கப்பட்டு பாராட்டப்பட்டார். இந்த துயரம் நிறைந்த நேரத்தில் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆறுதலைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடையட்டும்’ என ராகுல் டுவிட் செய்துள்ளார்.

மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், பா.ஜ.க. எம்பி கிரித் சோமையா, சிவசே எம்எல்ஏ மனிஷா காயண்டே என பல்வேறு கட்சி தலைவர்களும் குருதாஸ் காமத் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். #GurudasKamat #RIPGurudasKamat
Tags:    

Similar News