செய்திகள்

ஜீவனாம்சம் வழக்கில் ரூ.25 ஆயிரத்தை சில்லரையாக கோர்ட்டில் கட்டிய கணவர்

Published On 2018-07-25 07:08 GMT   |   Update On 2018-07-25 07:08 GMT
ஜீவனாம்சம் வழக்கில் கணவர் ரூ.25 ஆயிரத்தை சில்லரையாக மூட்டையில் கட்டி நீதிமன்றத்திற்கு வந்து மனைவியிடம் வழங்கினார். அதை ஏற்க அவரது மனைவி மறுத்து விட்டார். #Divorcecase
சண்டிகார்:

பஞ்சாப்-அரியானா மாநில ஐகோர்ட்டில் வக்கீலாக பணிபுரிபவருக்கும் அவரது மனைவிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்கிறார்கள். இருவரும் விவாகரத்து கேட்டு கோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளனர்.

இந்த நிலையில் வக்கீலின் மனைவி ஜீவனாம்சம் கேட்டு மனுதாக்கல் செய்து இருந்தார். இதையடுத்து மனைவிக்கு மாதம் ரூ.25 ஆயிரம் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவிட்டது.

இதை எதிர்த்து வக்கீல் ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதிகள், மாதம் ரூ.25 ஆயிரம் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்ற கீழ்க்கோர்ட்டு உத்தரவை உறுதி செய்ததுடன், ஏற்கனவே வழங்காமல் இருந்த 2 மாதத்துக்கான ஜீவனாம்சத்தையும் சேர்த்து மொத்தம் ரூ.50 ஆயிரம் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

இதையடுத்து வக்கீல் ரூ.25 ஆயிரத்தை சில்லரையாக மூட்டையில் கட்டி கோர்ட்டுக்கு வந்து மனைவியிடம் வழங்கினார். அதை ஏற்க அவரது மனைவி மறுத்து விட்டார். தனக்கு அவசரமாக பணம் தேவைப்படும் நிலையில் இப்படி சில்லரையாக தருவதும் ஒரு வகையில் கொடுமைதான், சில்லரையை வங்கியில் வாங்க மறுக்கிறார்கள் என்றார்.

உடனே வக்கீல் இந்த சில்லரைகளை எனது ஜூனியர்களை விட்டு எண்ணித் தரச்சொல்கிறேன். பின்னர் அதை ரூபாய் நோட்டுகளாக மாற்றித் தருகிறேன் என்றார். #Divorcecase
Tags:    

Similar News