செய்திகள்

மராத்தா இடஒதுக்கீட்டு போராட்டத்தில் 3 பேர் தற்கொலை முயற்சி - வாகனங்களுக்கு தீ வைப்பு

Published On 2018-07-24 14:08 IST   |   Update On 2018-07-24 14:08:00 IST
மகாராஷ்டிர மாநிலத்தில் மராத்தா இட ஒதுக்கீட்டு போராட்டத்தின்போது இன்று 3 பேர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். #MarathaProtest #MarathaReservation
அவுரங்காபாத்:

மகாராஷ்டிர மாநிலத்தில் அரசுப் பணி மற்றும் கல்வியில் இடஒதுக்கீடு கேட்டு மராத்தா சமூகத்தினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அரசுடன் நடந்த பேச்சுவார்த்தையை அடுத்து அவர்கள் போராட்டத்தை நிறுத்தி வைத்திருந்தனர். அதன்பின்னர் பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் இல்லாத நிலையில், மீண்டும் போராட்டத்தை தொடங்கி உள்ளனர். இந்த போராட்டத்தில் ஆங்காங்கே வன்முறை வெடித்துள்ளது.

அவுரங்காபாத் மாவட்டம் கோதாவரி ஆற்றின் அருகே நேற்று ஜலசமாதி போராட்டம் நடைபெற்றது. அப்போது போராட்டத்தில் பங்கேற்ற நபர் திடீரென பாலத்தில் இருந்து கோதாவரி ஆற்றில் குதித்து இறந்துபோனார்.

இந்நிலையில் இன்று அவுரங்காபாத்தில் நடந்த போராட்டத்தின்போது 3 பேர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர். 2 பேர் ஆற்றில் குதித்தனர். ஒருவர் விஷம் குடித்தார். மூன்று பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



இதேபோல் அவுரங்காபாத்தின் கங்காபூரில் மராத்தா கிரந்தி மோர்ச்சா தொண்டர்கள் மொட்டையடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சில அமைப்புகள் சார்பில் முழு அடைப்பு போராட்டமும் நடைபெறுகிறது. ஒரு சில இடங்களில் போராட்டத்தின்போது வன்முறை வெடித்தது. வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. கங்காபூரில் லாரியை கவிழ்த்து தீ வைத்தனர். இந்த வன்முறைப் போராட்டம் காரணமாக அவுரங்காபாத்தில் பதற்றமான சூழல் நிலவுகிறது. #MarathaProtest #MarathaKrantiMorcha #MarathaReservation 
Tags:    

Similar News