செய்திகள்
உ.பி.யில் பிரதமர் மோடி இன்று பிரசாரம் தொடங்குகிறார்
பாராளுமன்ற தேர்தலையொட்டி உத்தரபிரதேசத்தில் உள்ள தொகுதிகளை குறி வைத்து பிரதமர் மோடி இன்று முதல் இரண்டு நாள்களுக்கு பிரசாரம் செய்ய உள்ளார். #BJP #Modi
லக்னோ:
பாராளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு (2019) பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. மீண்டும் வெற்றி பெற்று மத்தியில் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பதில் பா.ஜ.க. தீவிரமாக உள்ளது. இதற்காக பா.ஜ.க. தேசியத் தலைவர் அமித்ஷா மாநிலம் வாரியாக சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
இதற்கிடையே பிரதமர் மோடியும் மக்களிடம் ஆதரவு திரட்ட சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளார். 2014-ம் ஆண்டு தேர்தலின் போது உத்தரபிரதேச மாநிலத்தில் அதிக கூட்டங்களில் பங்கேற்று மோடி பேசினார்.
அதுபோல், இந்த தடவையும் மோடி உத்தரபிரதேசத்தில் உள்ள தொகுதிகளை குறிவைத்து பிரசாரம் செய்ய உள்ளார். முதல் கட்டமாக வாரணாசி, அசம்கர், மிர்சாபூர் பகுதிகளில் நடைபெற கூட்டங்களில் மோடி பிரசாரம் செய்ய இருக்கிறார்.
முதலில் தனது சொந்த தொகுதியான வாரணாசி சென்றடைகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டரில் அசம்கர் செல்லும் மோடி அங்கு புரவஞ்சல் விரைவு நெடுஞ்சாலை பணிக்கு அடிக்கல் நாட்டுகிறார். அதன்பின் அங்கு நடைபெறவுள்ள கூட்டத்தில் உரையாற்றுகிறார்.
இதைத்தொடர்ந்து, வாரணாசி திரும்பும் மோடி அங்கிருந்து கச்னார் கிராமத்தில் நடைபெறவுள்ள கட்சி கூட்டத்தில் பேசுகிறார். நாளை மிர்சாபூரில் நடைபெறும்பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசவுள்ளார். இதற்கான விரிவான ஏற்பாடுகளை பா.ஜ.க. அரசு செய்துவருகிறது. #BJP #Modi