செய்திகள்

மகாத்மா காந்தி நினைவிடத்தில் தென்கொரிய அதிபர் மூன் ஜே-இன் மலர்தூவி மரியாதை

Published On 2018-07-10 06:06 GMT   |   Update On 2018-07-10 06:06 GMT
அரசுமுறை பயணமாக இந்தியா வந்தடைந்த தென்கொரிய அதிபர் மூன் ஜே-இன் மகாத்மா காந்தி நினைவிடத்தில் இன்று மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
புதுடெல்லி :

தென்கொரியா அதிபர் மூன் ஜே-இன் இந்தியாவில் 5 நாட்கள் அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். மூன் ஜே-இன் மற்றும் அவரது மனைவி மற்றும் அந்நாட்டின் மந்திரிகள், உயரதிகாரிகள் ஆகியோர் கடந்த 8-ம் தேதி டெல்லி வந்தடைந்தனர்.

டெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசிய மூன் ஜே-இன், உத்தரப்பிரதேசம் மாநிலம் நொய்டாவில் அமைக்கப்பட்டுள்ள மிகப்பெரிய சாம்சங் செல்போன் உற்பத்தி ஆலையை பிரதமர் மோடியுடன் இணைந்து நேற்று திறந்து வைத்தார்.

இந்நிலையில், அதிபர் மூன் ஜே-இன்க்கு ஜனாதிபதி மாளிகையில் இன்று அரசுமுறை வரவேற்பு அளிக்கப்பட்டது. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், அவரது மனைவி சவிதா கோவிந்த் மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் மூன் ஜே-இன் மற்றும் அவரது மனைவியை வரவேற்றனர்.



அரசுமுறை வரவேற்பை தொடர்ந்து, ராஜ்காட் சென்ற மூன் ஜே-இன், அங்கு அமைந்திருக்கும் மகாத்மா காந்தி நினைவிடத்தில் மனைவியுடன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

ஜனாதிபதி மாளிகையில் இன்று மாலை ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விருந்து நிகழ்ச்சியில் மூன் ஜே-இன் பங்கேற்க உள்ளார். 
Tags:    

Similar News