செய்திகள்

ரூ.4.17 கோடி சம்பளத்துடன் ரிலையன்ஸ் குழும தலைவர் பதவியில் மீண்டும் முகேஷ் அம்பானி

Published On 2018-07-07 12:32 GMT   |   Update On 2018-07-07 12:32 GMT
ரிலையன்ஸ் குழும நிறுவனங்களின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனராக முகேஷ் அம்பானி இன்று மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இன்னும் 5 ஆண்டுகள் இந்த பதவியில் அவர் நீடிப்பார். #Reliance #MukeshAmbani
மும்பை:

இந்தியா மற்றும் சில வெளிநாடுகளில் பல்வேறு தொழில் நிறுவனங்களை நடத்திவரும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவரான திருபாய் அம்பானி கடந்த 2002-ம் ஆண்டு காலமானார்.

அவரது மறைவுக்கு பின்னர் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைமை பொறுப்பை அவரது மூத்த மகனான முகேஷ் அம்பானி ஏற்று கொண்டார்.

உரத் தொழிற்சாலை, பெட்ரோல் பங்குகள் உள்ளிட்ட தொழில்களை வெற்றிகரமாக நிர்வகித்துவரும் ரிலையன்ஸ் குழுமம் தொலைத்தொடர்பு துறையிலும் சாதனை படைத்து வரும் நிலையில், இந்த குழுமத்தின் பங்குதாரர்களின் 41-வது ஆண்டாந்திர கூட்டம் கடந்த 5-ம் தேதி மும்பையில் நடைபெற்றது.



ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவரான முகேஷ் அம்பானியின் பதவிக்காலம் வரும் 19-4-2019 அன்றுடன் முடிவடையும் நிலையில், அவரையே மீண்டும் தலைவராக நியமிக்க கோரும் தீர்மானம் இந்த கூட்டத்தில் முன்வைக்கப்பட்டது.

இந்த தீர்மானத்தை ஆதரித்து 98.5 சதவீதம் பங்குதாரர்களும், எதிராக 1.48 சதவீதம் பேரும் வாக்களித்தனர்.

இதையடுத்து, மேலும் ஐந்தாண்டு காலத்துக்கு ரிலையன்ஸ் குழும நிறுவனங்களின் தலைவராக முகேஷ் அம்பானி நீடிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு 4.17 கோடி ரூபாய் சம்பளம் மற்றும் சுமார் 59 லட்சம் ரூபாய் அளவிலான இதரப் படிகளுடன் அவர் இந்த பதவியில் தொடருவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. #Reliance #MukeshAmbani
Tags:    

Similar News