செய்திகள்

சுவிஸ் வங்கியில் உள்ள இந்தியர்களின் பணம் அனைத்தும் கறுப்புப் பணம் அல்ல - அருண் ஜெட்லி

Published On 2018-06-29 20:13 IST   |   Update On 2018-06-29 20:13:00 IST
சுவிஸ் வங்கியில் உள்ள இந்தியர்களின் பணம் அனைத்தும் கறுப்புப் பணம் அல்ல மத்திய மந்திரி அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். #ArunJaitley #SwissBank #BlackMoney
புதுடெல்லி:

இந்திய அரசியல் புள்ளிகள், தொழிலதிபர்கள் சுவிட்சர்லாந்து உள்ளிட்ட வெளிநாட்டு வங்கிகளில் அதிகளவில் பணம் பதுக்கல் செய்துள்ளனர். கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலில் கருப்புப்பண விவகாரம் புயலாக வீசிய நிலையில், மோடி பல வாக்குறுதிகளுடன் ஆட்சியை பிடித்தார்.

பிரதமரானதும் கருப்புப்பணத்தை மீட்கும் நடவடிக்கையாக தனி குழு அமைத்தார். ஆனால், அதன் பின்னர், அந்த வேலையில் எந்த முன்னேற்றமும் நடந்ததாக தெரியவில்லை.

இதற்கிடையே, சுவிட்சர்லாந்தில் உள்ள நேஷனல் வங்கி இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டவர்கள் டெபாசிட் செய்துள்ள பணம் குறித்தான தகவல்களை வெளியிட்டது. கடந்த 2016-ம் ஆண்டை விட இந்தியர்களின் பணம் 50 சதவீதம் அதிகரித்துள்ளது. இது கடந்த மூன்றாண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகமாகும் என தெரிவித்துள்ளது. அதாவது சுமார் ரூ.7 ஆயிரம் கோடி உயர்ந்துள்ளது.

மேலும், ரூ.3,200 கோடி இந்திய ரூபாயாக வாடிக்கையாளர்களின் டெபாசிட்டுகளாக செலுத்தப்பட்டுள்ளது. பிற வங்கிகள் மூலமாக சுவிஸ் வங்கிகளில் போடப்பட்ட தொகை ரூ.1,050 கோடி. பங்குகள் உள்ளிட்ட பிற வகைகளில் செலுத்தப்பட்ட தொகை ரூ.2,640 கோடி என சில புள்ளி விவரங்கள் வெளியாகியுள்ளது. 

இந்நிலையில் சுவிஸ் வங்கியில் உள்ள இந்தியர்களின் பணம் அனைத்தும் கறுப்புப்பணம் அல்ல என்று மத்திய மந்திரி அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக அவர் பேஸ்புக் பக்கத்தில் கூறுகையில், சுவிஸ் வங்கியில் டெபாசிட் செய்தவர்களில் ஏராளமானோர் வெளிநாடு வாழ் இந்தியர்கள். சுவிஸ் வங்கியில் இந்தியர்களின் கறுப்புப் பணம் பதுக்கி இருந்தால் கண்டறியப்படும். சுவிஸ் வங்கியில் உள்ள இந்தியர்களின் பணம் அனைத்தும் கறுப்புப்பணம் அல்ல என பதிவிட்டுள்ளார். #ArunJaitley #SwissBank #BlackMoney
Tags:    

Similar News