செய்திகள்

ரூ. 2 ஆயிரம் கோடி கடன் முறைகேடு - கைதான மகாராஷ்டிரா வங்கி தலைவர் ஜாமினில் விடுவிப்பு

Published On 2018-06-27 19:57 IST   |   Update On 2018-06-27 19:57:00 IST
போலி நிறுவனங்களுக்கு 2 ஆயிரம் கோடி ரூபாய் கடன் அளித்து இழப்பை ஏற்படுத்திய மகாராஷ்டிரா வங்கியின் தலைவர் ரவிந்திரா பி மராத்தே இன்று ஜாமினில் விடுவிக்கப்பட்டார். #BankofMaharashtra #BankofMaharashtraCMD #2000crfakeloans
புனே:

இந்திய அரசுக்கு சொந்தமான பொதுத்துறை வங்கிகளில் முக்கியமான இடத்தில் இருப்பது மகாராஷ்டிரா வங்கி. 83 ஆண்டுகளாக இயங்கிவரும் இந்த வங்கியின் தலைவராகவும், மேலாண்மை இயக்குனராகவும் ரவிந்திரா பி மராத்தே என்பவர் பொறுப்பேற்றிருந்தார்.

இந்நிலையில், டி.எஸ். குல்கர்னி மற்றும் அவரது மனைவியின் பெயரால் டி.எஸ்.கே. குழுமத்தின் சார்பில் இயங்கி வந்த சில போலி நிறுவனங்கள் முதலீட்டாளர்களிடம் சுமார் 1150 கோடி ரூபாய் மோசடி செய்ததாகவும், முறைகேடான வகையில் வங்கிகளிடம் இருந்து சுமார் 2900 கோடி ரூபாய் கடனாக பெற்று மோசடி செய்ததாகவும் கடந்த ஜனவரி மாதம் தெரியவந்தது.

இதைதொடர்ந்து, டி.எஸ்.கே. குழுமத்தின் உரிமையாளர் டி.எஸ். குல்கர்னி மற்றும் அவரது மனைவியை கடந்த பிப்ரவரி மாதம் போலீசார் கைது செய்தனர். மகாராஷ்டிர மாநில அரசின் நடவடிக்கையால் இவர்களுக்கு சொந்தமான 120 சொத்துகளும், 275 வங்கி கணக்குகளும் கடந்த மே மாதம் முடக்கப்பட்டன.

இந்நிலையில், இவர்களுக்கு சொந்தமான போலி நிறுவனங்களுக்கு 2 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு கடனை வாரி வழங்கிய மகாராஷ்டிரா வங்கியின் தலைவர் ரவிந்திரா பி மராத்தே, செயல் இயக்குனர் ராஜேந்திரா கே குப்தா, வட்டார மேலாளர் நித்யானந்த் தேஷ்பான்டே மற்றும் முன்னாள் தலைவரும் மேலாண்மை இயக்குனருமான சுஷில் முஹ்னோத் ஆகியோரை பொருளாதார குற்றப்பிரிவு துறை அதிகாரிகள் கடந்த 20-ம் தேதி கைது செய்தனர்.

புனே சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்களை 27-ம் தேதி வரை விசாரணை காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இந்த காவல் இன்றுடன் முடிவடைந்த நிலையில் தன்னை ஜாமினில் விடுவிக்குமாறு ரவிந்திரா பி மராத்தே நீதிமன்றத்தில் மனு செய்திருந்தார்.

இதனையேற்ற சிறப்பு நீதிபதி ஆர்.எம்.சர்தேசாய் 50 ஆயிரம் ரூபாய் ரொக்க ஜாமினில் ரவிந்திரா பி மராத்தேவை விடுவித்து உத்தரவிட்டுள்ளார். #BankofMaharashtra #BankofMaharashtraCMD #2000crfakeloans 
Tags:    

Similar News