செய்திகள்

காஷ்மீரில் போர்நிறுத்தம் முடிந்த ஒரு மணிநேரத்தில் அரசு ஊழியர் சுட்டுக் கொலை

Published On 2018-06-18 07:59 GMT   |   Update On 2018-06-18 07:59 GMT
காஷ்மீரில் போர்நிறுத்தம் முடிவுக்கு வருவதாக மத்திய மந்திரி அறிவித்த ஒரு மணிநேரத்தில் அரசு ஊழியர் ஒருவர் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
ஸ்ரீநகர்:

காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டத்தில் கீலம் பகுதியை சேர்ந்தவர் இக்பால் கவாக் (45). அரசு ஊழியரான இவர் வாடிக்கையாளர் நலன் மற்றும் பொது வினியோக துறையில் ஊழியராக பணிபுரிந்தார்.

இவர் வீட்டில் இருந்தார். அப்போது அங்கு திடீரென 3 பயங்கரவாதிகள் புகுந்தனர். அவர்கள் தங்களது துப்பாக்கியால் இக்பால் கவாக்கை சரமாரியாக சுட்டனர்.

இதனால் பலத்த காயங்கள் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் பலியானார். அவர் சுட்டுக் கொல்லப்பட்டதற்கான காரணம் தெரியவில்லை.

புனித ரமலான் மாதத்தையொட்டி மத்திய அரசு காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை கடந்த மாதம் 17-ந்தேதி முதல் தற்காலிகமாக நிறுத்தி வைத்தது. தற்போது ரமலான் மாதம் முடிவடைந்த நிலையில் போர்நிறுத்தம் முடிவுக்கு வருவதாக மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் நேற்று அறிவித்தார்.

இந்த அறிவிப்பு வெளியான ஒரு மணி நேரத்தில் இத்தாக்குதல் நடைபெற்றது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் காஷ்மீரில் கவாக் உள்பட 12 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
Tags:    

Similar News